திருநெல்வேலி மாவட்டம் , திசையன்விளை பகுதியைச் சேர்ந்த 19 வயது தலித் இளைஞரை 3 பேர் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் இவர் ஆதிக்க சாதிப் பெண்ணை காதலித்ததால் கொலை செய்யப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியில் முத்தையா என்பவர் உடல் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் முத்தையாவின் குடும்பத்தினர், ஆதிக்க சாதிப் பெண்ணை காதலித்ததால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
மேலும் முத்தையாவின் தந்தை, கன்னியப்பன், காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் சமந்தப்பட்ட பெண்ணின் உறவினர்கள், முத்தையாவை கொலை செய்துள்ளதாக குறிப்பிடுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, கொலை செய்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஆனால் காவல்துறையினர் சாதி பிரச்சனையால் கொலை நடைபெறவில்லை என்று தெரிவித்துள்ளனர். காவல்துறை விசாரணையில் கூறப்பட்டுள்ளதாவது: “ சுரேஷ் என்பவரின் சகோதரியிடம், முத்தையா தவறாக நடந்துகொண்டார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சுரேஷிடம், அப்பெண் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்னதாக சுரேஷ் சகோதரியிடம் முத்தையாவின் உறவினர் தவறாக நடந்துகொண்டதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சகோதரியிடம் தவறாக நடந்துகொள்ள வேண்டாம் என்று சுரேஷ் முத்தையாவை எச்சரித்ததாகவும், கடந்த ஜூலை 22 ம் தேதியும் மீண்டும் முத்தையா அப்பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால், சுரேஷ் கோவம் அடைந்துள்ளார்.
சுரேஷ் நடந்த சம்பவம் தொடர்பாக அவரது உறவினர்கள் மதியழகன், ஜெயபிரகாஷிடம் கூறியதாகவும், மூவரும் முத்தையாவை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காவல்துறை விசாரணையில், கொலை செய்தவர்களும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், சாதி ஆணவக் கொலை நடைபெறவில்லை என்றும் தனிப்பட்ட பகையால் கொலை நடந்ததாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“