திருநெல்வேலி எஸ்என் ஹைரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து திருநெல்வேலி காவல்துறை துணை ஆணையர் சுரேஷ் குமார் கூறுகையில், சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியர் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் மீது ஐபிசி 304 (ii) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை காலை 10:50 மணியளவில் மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்றபோது, சிறுநீர் கழிப்பிடம் அருகிலுள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு மற்ற மாணவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த அறிந்த உடனே, திருநெல்வேலி காவல் ஆணையர் என்.கே.செந்தாமரை கண்ணன் உள்ளிட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் தலைமைக் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
காயமடைந்த மாணவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
அன்பழகன் (9 ஆம் வகுப்பு), விஸ்வரஞ்சன் (8ஆம் வகுப்பு) மற்றும் சுதீஷ் (6ஆம் வகுப்பு) ஆகிய மூன்று மாணவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்தனர்.
மேலும் சஞ்சய் (வகுப்பு VIII), இசக்கி பிரகாஷ் (வகுப்பு IX), சேக் அபுக்கர் (வகுப்பு XII) மற்றும் அப்துல்லா (வகுப்பு VII) என்ற 4 மாணவர்கள் விபத்தில் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனைத்து தனியார், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டட நிலையை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய சிறப்புக் குழு அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
“முதற்கட்ட நடவடிக்கையாக, பொதுப்பணித் துறை (PWD) மூலம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினோம். நான்கு பக்க சுவர்களில் ஒன்று சரியான அடித்தளம் இல்லாமல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டோம். பொதுப்பணித்துறையின் தொழில்நுட்ப ஆய்வுக்கு பின், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இந்த சம்பவத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கும், காயமடைந்த மாணவர்களுக்கும் நீதி கேட்டு பள்ளி வளாகத்திற்குள் மாணவர்களும், பெற்றோரும் தர்ணா நடத்தினர். பள்ளி நிர்வாக அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மாணவர்களைக் காப்பாற்றவோ அல்லது அவர்களின் பெற்றோருக்குத் தெரிவிக்கவோ தவறியதாக மாணவர்கள் கூறினர்.
பள்ளியில் இருந்த திருநெல்வேலி எம்.எல்.ஏ.வும், பா.ஜ., பிரமுகருமான நைனார் நாகேந்திரன் கூறுகையில், “இந்த சம்பவத்தால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். விபத்து நடந்தவுடன் பள்ளி நிர்வாகம் உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என பெற்றோர்கள் என்னிடம் தெரிவித்தனர். இது உண்மை மற்றும் கண்டிக்கத்தக்கது,” என்றார்.
இறந்தவ மாணவர்களின் உடலை பெற மறுத்த பெற்றோர், மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகள் மற்றும் கட்சித் தலைவர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்துதான் அவர்கள் சடலத்தை ஏற்றுக்கொண்டனர்.
விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முதல்வர் உத்தரவுப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகணப்பன் தெரிவித்தார். அவை நான்கு பேரும் சீரான உடல்நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மறு உத்தரவு வரும் வரை பள்ளி மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.