Advertisment

'கஜ'வுக்காக முதல்வர் டெல்லி பயணம்; செவி சாய்க்குமா மத்திய அரசு?

கஜா புயலிலும் அது தொடருமா? என்பது முதல்வரின் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு தெரிந்துவிடும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live

Tamil Nadu news today live

தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கஜா புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தஞ்சை புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பார்வையிட்டனர். புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டது. கனமழை காரணமாக திருவாரூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் அவர்கள் மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்தானது.

Advertisment

நிவாரண உதவியாக முதற்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாயை தமிழக அரசு அறிவித்துள்ளது. புயல் பாதித்த இடங்களில் சேத மதிப்பீடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் நிவாரண நிதி கேட்டு, இன்று மாலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை காலை 9:45 மணி அளவில் பிரதமர் மோடியை அவரது ரேஸ்கோர்ஸ் இல்லத்தில் சந்திக்கவிருக்கிறார்.

சேத மதிப்பு குறித்த பட்டியலை தயாரிப்பதற்காக, இன்று காலை தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். 514 பாதுகாப்பு முகாம்களில் 2.50 லட்சம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 86 ஆயிரத்து 702 மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன 4,844 மீன்பிடி படகுகள், 5,550 மீன் வலைகள், 5,752 மீன்பிடி படகுகளின் என்ஜின்கள் பாதிப்படைந்துள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கரில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் கஜா புயலில் முறித்து போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசமாகியுள்ளன. விவசாயம் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்தெல்லாம் முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இறுதியாக, மத்திய அரசிடம் எவ்வளவு நிதி கேட்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படவுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கிய ஒக்கி புயல், கடும் சேதத்தை ஏற்படுத்தியது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 177 மீனவர்கள் மாயமாகினர். மத்திய அரசின் நிவாரண நிதியாக 4,037 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கோரியது. ஆனால் வெறும் 133.05 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியது.

2016 டிசம்பரில், சென்னை உட்பட 4 மாவட்டங்களை "வர்தா" புயல் தாக்கியது. 17 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்தன. 40 மின் கோபுரங்கள், 800 மின்மாற்றிகள் மற்றும் 4500 மின் பகிர்மானப் பெட்டிகள் சேதமடைந்தன. மேலும், 15,000 கி.மீ. உயர்நிலை மின்கம்பிகள் சேதமடைந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புயல் நிவாரண நிதியாக தமிழக அரசு 22,573 கோடி ரூபாய் கேட்ட நிலையில், வெறும் 266.17 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தை புயல் தாக்குவதும், ஒருமாதம் கழித்து மத்திய குழு சேதமதிப்பீட்டை பார்வையிடுவதும், தமிழகம் எதிர்நோக்கும் நிதியில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே மத்திய அரசு தருவதும் தொடர் கதையாகிவிட்டது. கஜா புயலிலும் அது தொடருமா? என்பது முதல்வரின் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு தெரிந்துவிடும்.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment