தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை கட்டுபடுத்தும் வகையில், ரூ.50,000 அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யும் புதிய மசோதா ஒன்று இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் கடும் பாதிப்பு ஏற்படும் என மீனவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையின் இந்த சட்ட மசோதா தமிழக மீனவர்களிடையே பெரும் கொதளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கலான புதிய மசோதாவை ஏற்க முடியாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் பழனிசாமி அழுத்தம் தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவன தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை சிறைகளில் ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 140-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு நாசமாகிக் கொண்டுள்ளன. இந்நிலையில் இலங்கை அரசு இயற்றியுள்ள புதிய சட்டம் தமிழக மீனவர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படும். எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்வதற்கு இந்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சினையில் பிரதமருக்குக் கடிதம் எழுதும் சடங்கைச் செய்துவிட்டு மெத்தனமாக இருக்காமல் தமிழக முதல்வர் நேரடியாகச் சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜூன் மாதம் 15-ம் தேதிக்குப் பிறகு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பதையும் தனது அறிக்கையின் மூலம் திருமாவளவன் சுட்டிக் காட்டியுள்ளார்.