7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த 7-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கடந்த புதன்கிழமை சந்தித்து பேசினர். இதில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தை தொடங்குவதாக அறிவித்தனர். மற்றொரு பிரிவினர் வேலை நிறுத்தம் அறிவித்ததை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் சேகரன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'வேலை நிறுத்தத்தை ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது' என்று கூறி போராட்டத்துக்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.
இருப்பினும், கோர்ட் உத்தரவை மீறி நேற்றுமுதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இதனால், போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக தமிழக அரசு ‘போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வேலை செய்யாத நாளுக்கான சம்பளத்தை நிறுத்துவது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடைக்கால நீக்கம் செய்வது, விடுமுறை எடுக்க தடை விதிப்பது’ போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி எச்சரித்து வருகிறது.
இந்த நிலையில், அனைத்துத் துறை செயலாளர்களுக்கும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.ஸ்வர்னா அனுப்பியுள்ள அரசாணையில், "கடந்த அரசு கடிதத்தில், அரசு ஊழியர்கள் சமர்ப்பிக்கும் சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்தமாக எடுக்கும் சாதாரண விடுப்பு ஆகியவற்றை அனுமதிக்கக்கூடாது. அவர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அதை அங்கீகாரமற்ற விடுப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக, மருத்துவ விடுப்பு தவிர சாதாரண விடுப்பு, ஒட்டுமொத்த சாதாரண விடுப்பு, ஈட்டிய விடுப்பு ஆகிய எதையும் அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிடப்படுகிறது.
மருத்துவ விடுப்பை அளிப்பதற்கு முன்பதாக, விடுப்பு கேட்டவரை மருத்துவ குழுவுக்கு அனுப்பி, அவரிடம் இருந்து உடல்நிலை குறித்த சான்றிதழை வாங்கி பரிசீலிக்க வேண்டும்.
உடல்நிலை பற்றிய உண்மை தெரியாமல் மருத்துவ விடுப்பை வழங்கக்கூடாது. கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ், உண்மையிலேயே மருத்துவ காரணங்களுக்காக பெறப்படவில்லை என்று கண்டறியப்பட்டால் அந்த அரசு ஊழியரை தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
மேலும், மருத்துவ விடுப்பு கேட்டுள்ள நிலையில் அவர்களின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை கண்டறியும் வரை அந்த மருத்துவ விடுப்பு காலகட்டத்துக்கான சம்பளத்தை வழங்கக்கூடாது" என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.