”ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும்?”, எனக்கூறி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் தன் பணியை ராஜினாமா செய்தார்.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத அரியலூர் மாணவி அனிதா, கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பையடுத்து, நீட் தேர்வுக்கு முற்றிலுமாக தடை கோரியும், மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் கோரியும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவ அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பள்ளி ஆசிரியை தன் பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். விழுப்புரம் மாவட்டம், ஓலக்கூர் ஒன்றியத்தில் உள்ள வைரபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சபரிமாலா என்பவர் தான் அந்த ஆசிரியர்.
இதுதொடர்பாக, அவர் தன் ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டதாவது, “நான் 2002 முதல் ஆசிரியராக தமிழக கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன். மாணவர்களுக்காக என் வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன். இந்நிலையில், மாணவி அனிதாவின் மரணத்தினை ஒரு ஆசிரியராக ‘கல்வி எழுச்சி’ கொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன். ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது நிலைப்பாட்டை தன்னெழுச்சியை 06.09.2017 அன்று காலை 09.30 மணியளவில் என் பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் துவங்கினேன். அனுமதி இல்லாமல் தொடரக் கூடாது என்றதும் அங்கிருந்து 1.30 மணியளவில் கிளம்பி காவல் நிலையத்தில் அனுமதி கேட்டேன். அவர்கள் அனுமதி வழங்கவில்லை. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்சனைக்காக குரல் எழுப்பியது குற்றம் என சொல்கிறது சட்டம். சம்பளத்திற்காக ஆசிரியர் போராடும்போது ”சமத்துவம் கொண்ட கல்விக்காக ஒரு ஆசிரியர் போராடக் கூடாது என்று சொல்வது வேதனையைத் தருகிறது. எனது வேலையை விட என் தேசம் எனக்கு முக்கியம் என்பதால், என் ஆசிரியர் பணியினை 7.09.2017 வியாழன் அன்று (காலை) வருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன்”, என குறிப்பிட்டிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/59d49b30-a892-4760-9022-0631f486ebc8-169x300.jpg)
தங்கள் சொந்த சலுகைகளுக்காக பெரும்பாலான ஆசிரியர்கள் போராடுகையில், சமூக நலனுக்காக ஆசிரியை ஒருவர் ராஜினாமா செய்திருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.