மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா, சென்னையில் அடுத்த மாதம் 30 தேதி நடைப்பெறும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா :
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கடந்த ஒருவருடமாக தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்த இரண்டு மாவட்டங்களிலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுக் குறித்த அரசானை இன்று வெளியிடபட்டது.
அதன்படி வரும் செப்.22-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.அதே போல் இதன் நிறைவு விழா சென்னையில் செப்.30ம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது,
“முதலவர் தலைமையில் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை கொண்டாட முடிவு செய்யப்பட்டு விழா நடத்தப்பட்டது.
நிர்வாக காரணங்களால் கன்னியாகுமரி மாவட்டத்திலும், சென்னையிலும் விழா நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 22.9.2018 அன்று நடத்தவும் நிறைவு விழாவை அடுத்த மாதம் 30-ந்தேதி அன்று சென்னையில் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.