நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
சென்னையின் ”பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல்” எனும் தலைப்பில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் செவ்வாய் கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் பயிற்சி பெறும் வகையில், 54,000 கேள்விகள் அடங்கிய சி.டி வழங்கப்படும்.
2. முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை எதிர்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக, காட்சிப்பொருள்களை அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
3. அரசு பள்ளி மாணவர்களுக்கு எதிர்காலத்தில் மூன்று வித சீருடைகள் வழங்கப்படும். இதன்மூலம், அவர்கள் எந்த வகுப்பு மாணவர்கள் என்பதை தெரிந்துக் கொள்ள முடியும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு உடை, ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை ஒரு உடை, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு உடை என மூன்று வித சீருடைகள் வழங்கப்படும். அதில் இரண்டு சீருடைகள் தைத்து தரப்படும். இரண்டு சீருடைகள் தைக்காமல் துணியாக தரப்படும். அதனை மாணவர்கள் தங்கள் அளவுக்கேற்ப தைத்துக் கொள்ளலாம் என அமைச்சர் கூறினார்.
4. கல்வி முறையில் மூன்று மாதங்களில் மாற்றம் கொண்டு வரப்படும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டுமே தரமான கல்வி வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தை மாற்றும் விதத்தில், அதற்கு இணையாக கல்வி முறையில் மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
5. தமிழர் பண்பாடு, இலக்கியம் ஆகியவை தொய்ந்துவிடாத வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். 11 மற்றும் 12-ஆம் வக்குப்பு பாடத்திட்டங்கள் கடந்த 12 ஆண்டுகளாகவும், மற்ற வகுப்பு பாடத்திட்டங்கள் சுமார் ஏழு ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருப்பதாலும், கூடிய விரைவில் பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்படும். அந்த பாடத்திட்டம் இந்தியாவிலேயே முதன்மையானதாக இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
6. மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த அளவில் புதிய மடிக்கணினி வழங்கப்படும்