தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வி துறை அமைச்சருமான அமைச்சர் பொன்முடி வீடுகளில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அவரது சென்னை மற்றும் விழுப்புரம் வீடுகளில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடந்து வருகிறது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க தலைவர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து பேசியுள்ள தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, 'அமலாக்கத்துறையை காட்டி எல்லாம் திமுகவை மிரட்ட முடியாது' என்றும் தி.மு.க எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், 'அமலாக்கத்துறையால் பதியப்பட்ட வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?. 100 வழக்குகளில் 2-ல் கூட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அமலாக்கத்துறைக்கு சோதனைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம், மிசாவையெல்லாம் பார்த்திருக்கிறோம். பொன்முடி வீட்டில் நடத்தப்படும் சோதனை பழிவாங்கும் நோக்கம்.
பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுக்கு பின் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பதால் மத்திய அரசு பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் பா.ஜ.க அமலாக்கத்துறையை ஏவி வருகிறது.
அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட வழக்கை வைத்து மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. சட்ட ஆலோசனை வழங்குவதற்கு கூட உள்ளே அனுமதிக்கவில்லை. தி.மு.க எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு கவுண்ட்டவுன் ஆரம்பமாகி விட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பார்க்கும் பொழுது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க கட்சி குறைந்த அளவிலேயே வெற்றிபெற வாய்ப்பு உள்ளது' என்று .மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil