ஆளுநர் மாளிகைக்கு பொருள்கள் வாங்கிய முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கணக்காளர்கள் இருவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை யின் துணை செயலாளர், கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி கிண்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2015 முதல் 2017 வரை ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர், அலங்கார பொருட்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாகவும், அதில் தொடர்புடையவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளுநர் மாளிகைக்கு பர்னிச்சர் வழங்கி வந்த அடையாரில் இயங்கி வந்த தனியார் கடை உரிமையாளர் முகமது யூனுஸ், ஆளுநர் மாளிகை கணக்காளர் பணிபுரியும் சிவக்குமார், ஓய்வு பெற்ற உதவி கணக்காளராக பணி புரிந்த குப்புசாமி உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி குப்புசாமி, சிவக்குமார் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, குப்புசாமி, சிவக்குமார் இருவருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கினர்.
மறு உத்தரவு வரும் வரை இருவரும் தினமும் காலை 10.30 மணிக்கு விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.