சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில், ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கையை சமர்ப்பித்தது.
கலாஷேத்ரா பாலியல் புகாரில், ஒரு ஆசியர் கைது செய்யப்படுள்ள நிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை நடத்தி, பாலியல் புகாரில் மேலும் மூன்று பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.
கலாஷேத்ராவில் ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக கூறி, சமீபத்தில் பல நாட்களாக போராட்டம் நடத்திய மாணவர்களிடம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத் தொடர்ந்து, மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரி, கலாஷேத்ராவில் மேலும் 3 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் எனவும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
முன்னாள் மாணவி ஒருவரின் புகாரின் பேரில் ஆசிரியர்களில் ஒருவரான உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார். இசைக்குழு கலைஞர்களான ஸ்ரீநாத், சஞ்சித் லால் மற்றும் சாய் கிருஷ்ணன் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் குற்றவியல் விசாரணைகள் தொடர வேண்டும் என்றும் இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலாஷேத்ரா நிர்வாகத்திற்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ். குமாரியின் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"