அன்றாட சமையலுக்கு மிகவும் அத்தியாவசியமான தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் விலை கடந்த சில தினங்களாக அதிகமாகவே உள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி சுமார் 200 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்டது. இன்றைய தினமும் கூட ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது.
அதேபோல் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. பருவமழை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததால் தக்காளி, மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் மீம், மற்றும் காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் புதுமண தம்பதிக்கு தக்காளி மற்றும் சின்ன வெங்காயம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் ஹாலில் கணேஷ்-ஹேமா தம்பதியினரின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் விவசாயிகள் புதுமண தம்பதிகளுக்கு தக்காளியை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
அதேபோல் மணமகனின் நண்பர்கள் சின்ன வெங்காயத்தை அன்பளிப்பாக அளித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“