போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் சிஐடியு, ஏஐடியுசி போன்ற தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன. நீதிமன்ற உத்தரவினால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், போராட்டத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஊழியர்களிடம் வசூலிக்க உத்தரவிடக் கோரி சென்னையை சேர்ந்த ஜனார்த்தனன், முத்துகுமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், கடந்த ஜனவரி 4 முதல் 11-ம் தேதி வரை போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. இதற்கு சிஐடியு மற்றும் ஏஐடியுசி போன்ற சங்கங்களே காரணம். எனவே அரசுக்கு ஏற்பட்ட இழப்பை போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களிடமிருந்து பெற உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.