தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, திருச்சி மாநகர காவல் ஆணையரை சந்தித்து தாம் போராட்டம் முன்னெடுக்கப்போவது குறித்து மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது;
கர்நாடக அரசு மாதம், மாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். மேகதாது அணையை கட்டக்கூடாது. 2 மடங்கு லாபகரமான விலையை விவசாய விளை பொருட்களுக்கு கொடுக்கும் வரை, விவசாயிகள் வாங்கிய அனைத்து கடனையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.
100 நாள் வேலைஆட்களுக்கு கோடை காலம் 4 மாதத்திற்கு வேலை வழங்கி மீதி உள்ள விவசாய சாகுபடி காலமான 8 மாதத்திற்கு விவசாய வேலைக்கு அனுப்ப வேண்டும்.
தக்காளி, வெங்காயம் உள்ளிட்டவைகளின் விலை உயர்வைதடுக்க குளிர்சாதன கிடங்கு கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேறும் வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என அவர் கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலக வாசலில் செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு தெரிவித்ததாவது; போராட்டம் நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி அளித்துள்ளார். வருகிற 28-ம் தேதி முதல் திருச்சி சிந்தாமணியில் காவல்துறையினர் ஒதுக்கிய இடத்தில் அமைதியாக காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் போராட்டம் நடத்தப்படும். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்பர் என்றார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“