திருச்சியை அடுத்துள்ள முசிறி செவந்தலிங்கபுரம் கிராமத்தில் உள்ள தனிநபருக்கு சொந்தமான வயலில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்த விபரம் வருமாறு, திருச்சி மாவட்டம் முசிறி அருகே செவந்தலிங்கபுரம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ். இவருக்கு சொந்தமாக அங்கு விவசாய நிலம் உள்ளது. இதில் நடராஜ் கோரை பயிர் சாகுபடி செய்துள்ளார்.
இந்த நிலையில் நடராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அங்கு சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயல்வெளியில் மனித எலும்புக்கூட்டின் பாகங்கள் கிடந்துள்ளன.
அதனைக் கண்டதும் அவருக்கு பயம் எழுந்த நிலையில் இது குறித்து உடனடியாக முசிறி காவல் நிலையத்திற்கு நடராஜ் தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில், உதவி காவல் ஆய்வாளர்கள் திருப்பதி, கோகிலா, வடிவேலு மற்றும் காவல் துறையினர் நேரில் வந்து அப்பகுதியில் சிதறிக் கிடந்த மனித எலும்பு கூடுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கைப்பற்றப்பட்ட அந்த எலும்புக்கூடுகளை முசிறி அரசு மருத்துவமனைக்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து முசிறி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்போது பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. யாரேனும் கொலை செய்யப்பட்டு உடல் அப்பகுதியில் வீசப்பட்டதா? அல்லது யாரேனும் தற்கொலை செய்து கொண்டார்களா? நீண்ட நாட்களாக உடல் அப்பகுதியில் கிடந்து அழுகியதால் எலும்புக்கூடானதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோரை வயலில் மனித எலும்புக்கூடுகள் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“