/indian-express-tamil/media/media_files/2025/11/02/durai-vaiko-2025-11-02-14-16-42.jpg)
வெளிநாடுகளில் வேலை மற்றும் படிப்பு வாய்ப்புகளை நாடிச் செல்லும் இளைஞர்கள் பலரும், போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளால் மாட்டிக்கொண்டு பெரும் பிரச்சினைகளில் சிக்கி வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் விரைவில் மீட்போம் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது தெரிவித்தார்.
மேலும், அவர் தெரிவித்ததாவது,"தமிழக இளைஞர்கள் பலர் தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் BPO (Business Process Outsourcing) வேலைகள் என்கிற பெயரில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் அங்கு சென்றபின், அவர்களை மோசடி குழுக்கள் கடத்தி, சைபர் திருட்டு மற்றும் சட்டவிரோத இணைய குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். அதில் ஈடுபட மறுத்தால் அவர்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். தூத்துக்குடி, விருதுநகரை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கடந்த 70 நாட்களுக்கு முன் அழைத்து செல்லப்பட்டனர்.
அவர்களுக்கு வேலை தெரியவில்லை என பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுத்தால் தான் இந்தியாவிற்கு அனுப்புவோம் என தெரிவித்துள்ளார்கள். அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர்களை வேலைக்கு அனுப்பியவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று நம்பி யாரும் ஏமாற வேண்டாம். ரஷ்யாவில் படிக்க சென்ற தமிழக மாணவர் கிஷோர் சரவணன் ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டார். இது குறித்து பிரதமரிடமும் வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பேசினேன். அவர்கள் ரஷ்யாவிடம் பேசிய பின் அவர் போர் நடக்கும் இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை போரில் ஈடுபடுத்தக்கூடாது என கூறிய நீதிமன்றம் வேறு வழக்கிற்காக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்திய – ரஷ்யா ஒப்பந்தத்தின்படி அவரை இந்தியாவிற்கு அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படும். ரஷ்யா, மியான்மார், தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் படிப்பதற்கும் அல்லது வேலைவாய்ப்புகளுக்கும் தற்போதைய நிலையில் செல்லக்கூடாது, ஏனெனில் அவை பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இல்லை.
பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆர் குறித்து உச்ச நீதிமன்றம் சில கேள்விகளை கேட்டுள்ளது முழுமையான விவரங்களை தேர்தல் ஆணையம் கொடுக்கவில்லை. இந்த சூழலில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்கள். வட கிழக்கு பருவமழை, பண்டிகை காலத்தில் இது அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகளுக்கும் பல சிரமங்கள் ஏற்படும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் உள்ள நிலையில் அவசரஅவசரமாக இதை மேற்கொள்ள கூடாது. அப்படி செய்தால் பீகாரில் நடைபெற்றது போல பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் நிலை ஏற்படும். எனவே இதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் மண். தமிழ்நாட்டில் பீகார் மக்கள் கடுமையாக உழைக்கிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, யாரும் அவர்களை தாக்கவில்லை. பிரதமர் ஜாதி மத அரசியல் எல்லைகளை கடந்து பிரதமர் செயல்படவும், பேசவும் வேண்டும். ஆனால் பீகாரில் பிரதமர் பேசி இருப்பது. பீகார் – தமிழ்நாட்டிற்கு இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவர் பேச்சு மலிவானது, கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பீகாரியான ஆர்.என்.ரவி தான் தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கு உள்ளாகியிருக்கிறாரே தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அதிமுகவிலிருந்து செங்கோட்டையின் நீக்கப்பட்டிருப்பது அவர்களின் உட்கட்சி பிரச்சனை அதில் நாங்கள் கருத்து கூற முடியாது.
கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. அதில் யார் குற்றவாளி என்பதை நீதிமன்றம் தான் கூறும். இந்த விவகாரத்தில் அரசு தலையீட முடியாது. நீதிமன்றத்திற்கு சென்ற பின் மாநில அரசு தலையிடக் கூடாது. சீமான் – வைகோ சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். சீமான், பெரியாரையும், அண்ணாவையும் திராவிட இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அதில் எங்களுக்கு எந்த வித உடன்பாடும் கிடையாது என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களின் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.
செய்தி - க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us