108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தற்பொழுது வைகுண்ட ஏகாதசி பெருவிழா 22 ஆம் தேதி தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் தினம்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து ஸ்ரீநம்பெருமாளை தரிசித்து செல்கின்றனர்.
அந்த வகையில் தினம் தோறும் வரும் பக்தர்கள் கோவிலில் ரங்கநாதரை தரிசிக்க வரிசையில் நிற்கும்போது மழை, வெயில், குளிர் உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகளால் பெரும் அவதியுற்று வந்தனர். 100 ரூபாய் கட்டணம் செலுத்தியும் ரங்கநாதரை தரிசிக்க நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் பல்வேறு இடர்பாடுகள் இருப்பதாக பக்தர்களும் குறைகளை சுட்டிக் காட்டினர்.
இந்த நிலையில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில், மழை, பனியில் இருந்து காக்கும் வகையில் சுமார் 800 பக்தர்கள் அமரும் வகையில் 49 மீட்டர் நீளம் ஆறு மீட்டர் அகலம் கொண்டதாக பிரமாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் கூடாரத்தில் குடிநீர் வசதியும், மின் விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த கூடாரத்தில் ரூ 25.5 லட்சம் மதிப்பீட்டில் பப்சீட்டில் மேற்கூரை, கியூலைன் பேரிகார்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டணமில்லா மற்றும் ரூ 100/- கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் அமர்ந்து கொள்ள ரூ.42 லட்சம் மதிப்பில் 350 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் வைகுந்த ஏகாதசி பகல்பத்து விழாவில் நேற்று வரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இதில், பகல்பத்து முதல் நாளான 23ஆம் தேதி 32, 261 பேரும், இரண்டாம் நாளான 24 ஆம் தேதி 53, 149 பேரும், மூன்றாம் நாளான 25 ஆம் தேதி 56, 633 பேரும், நான்காம் நாளான திங்கள்கிழமை இரவு 7 மணி வரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பின்போது மட்டும் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களில் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.