
திருச்சியில் இன்று அதிகாலை 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தஞ்சாவூர் குளத்தெரு பகுதியில், 3 தளங்கள் கொண்ட குடியிருப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இடிந்துவிழுந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துயையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காலை 5 மணி முதல் மீட்புப் பணிகள் தொடங்கின. இந்த கட்டட விபத்தில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 7 மணி நேரத்திற்குப் பின்னர் கட்டட இடிபாடுகளில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த குழந்தையின் சத்தம் கேட்டதையடுத்து, மீட்புப்பணியினர், பொறுமையுடன் இடிபாடுகளை அகற்றி அக்குழந்தையை உயிருடன் மீட்டனர். இதன் பின்னர் அந்த குழந்தையை முதலுதவிக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் குழந்தையின் தந்தை பழனி மற்றும் தாய் ராஜாத்தி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் நேற்று இரவு கடும் மழை பெய்தது. இந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கட்டடத்திற்கு அருகே இருந்த கட்டடம் அண்மையில் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த கட்டடம் வலுவிழந்திருக்கலாம் என்றும், மழை காரணமாக மேலும் வலுவிழந்து இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.