Advertisment

மாவட்டம் வாரியாக டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் : அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்லமாட்டார்

ஆட்சியும் அதிகாரமும் எடப்பாடியின் கையில் இருக்கும் சூழலில், தேவையில்லாமல் தலைமைக்கழகம் சென்று பிரச்னை ஏற்பட்டு, டி.டி.வி.தினகரன் கைதாகும் சூழல் உருவாகிவிடக்கூடாது...

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாவட்டம் வாரியாக டி.டி.வி.தினகரன் சுற்றுப்பயணம் : அ.தி.மு.க. அலுவலகத்திற்கு செல்லமாட்டார்

டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்திற்கு செல்லமாட்டார்; மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செல்வார் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Advertisment

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான இரு அணிகளும் இணைய டி.டி.வி.தினகரன் விதித்த கெடு ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் (நாளை) முடிகிறது. எனவே டி.டி.வி.தினகரன் ஆகஸ்ட் 5-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வருவாரா? என்கிற கேள்வி எழுந்தது. அண்மையில் பெங்களூருவில் சசிகலாவை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரன், ‘அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு சென்றால், என்னை யாரும் தடுக்க முடியாது’ என கூறியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் அவரை நாஞ்சில் சம்பத், நடிகர் ரித்தீஷ் உள்பட அவரது ஆதரவாளர்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பை முடித்து வெளியே வந்த ரித்தீஷ் நிருபர்களிடம் பேசுகையில், ‘அ.தி.மு.க. ஆட்சி நன்றாக நடக்கிறது. கட்சிதான் முடங்கி கிடக்கிறது. எனவே டி.டி.வி.தினகரன் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள். விரைவில் டி.டி.வி.தினகரன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கிறேன்’ என்றார். டி.டி.வி.தினகரனின் எண்ணவோட்டத்தையே ரித்தீஷ் இப்படி பேட்டி மூலமாக சொன்னதாக தெரிகிறது.

அடுத்து நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறுகையில், ‘கட்சியில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் உரிமை பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கும் மட்டும்தான் உண்டு.’ என்றார். எடப்பாடி பழனிசாமி இப்படி கூறவில்லையே? என நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் இதுவரை என்னதான் சொல்லியிருக்கிறார்?’ எனக் கேட்டு நிருபர்களை சிரிக்க வைத்தார் சம்பத்.

அவரிடமும், ‘அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு டி.டி.வி.தினகரன் நாளை வருவாரா?’ என நிருபர்கள் கேட்டபோது, ‘துணைப் பொதுச்செயலாளர் கட்சி அலுவலகத்திற்கு வருவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. ஒரு பொன் மாலைப் பொழுதில் அவர் வருவார்’ என்றார் சம்பத். 5-ம் தேதியே வரவிருப்பதாக சம்பத்தும் கூறவில்லை. இது குறித்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், ‘எடப்பாடி பழனிச்சாமிக்கும், டி.டி.வி.க்கும் இடையே மோதல் ஏற்பட்டு, அதன் மூலமாக இந்த ஆட்சி கவிழவேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ். மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கு டி.டி.வி.தினகரன் ஒருபோதும் இரையாக மாட்டார்.” என்கிறார்கள்.

ஆட்சியும் அதிகாரமும் எடப்பாடியின் கையில் இருக்கும் சூழலில், தேவையில்லாமல் தலைமைக்கழகம் சென்று பிரச்னை ஏற்பட்டு கைதாகும் சூழல் உருவாகிவிடக்கூடாது என டி.டி.வி.தினகரன் தயங்குவதாகவும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம், மாநிலம் வாரியாக டி.டி.வி. சுற்றுப்பயணம் செல்வதற்கும், விரும்புகிறவர்கள் அதில் பங்கேற்கவும் எடப்பாடி தரப்பு தடை சொல்லவில்லை. எனவே டி.டி.வி.தினகரன் தனது சுற்றுப்பயணத் திட்டத்தை எந்த நேரமும் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment