டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சபாநாயகர் தனபால் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் ஆகஸ்ட் 17-ம் தேதி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் கொடுத்தனர். அடுத்த இரு நாட்களில் அவர்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் மனு கொடுத்தார்.
அதை ஏற்று சபாநாயகர் தனபால், மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அப்போது புதுவையில் முகாமிட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த 10-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். டிடிவி.தினகரன் தரப்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ.வும் அந்த வழக்கில் இணைந்தார். அப்போது மேற்படி 18 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருக்கிறாரா? என நீதிபதி கேள்வி எழுப்பியபோது, ‘நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உத்தரவாதம் தர முடியாது’ என அட்வகேட் ஜெனரல் பதில் தெரிவித்தார். எனவே 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சூழலில் இன்று (செப். 18) அதிரடியாக வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார்.
இந்த நடவடிக்கை காரணமாக தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக டிடிவி அணி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறினார்.