அமைச்சர் ஜெயகுமாருடன் ஒரே மேடையில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. கலந்துகொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு இல்லாமல் வந்தார் வெற்றிவேல்.
அதிமுக.வில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு இடையிலான பிரச்னை அடிப்படையிலும் எந்த அணியில் தொடர்வது? என முடிவெடுத்து வருகிறார்கள். அதாவது, மாவட்டச் செயலாளர் ஒருவர் எடப்பாடி பழனிசாமி அணியில் இயங்கினால், அவரைப் பிடிக்காத மாவட்ட துணைச் செயலாளர் டிடிவி.தினகரன் அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவிவிடுவது நடக்கிறது.
அந்த வகையில் சென்னை அதிமுக.வில் அமைச்சர் ஜெயகுமாருக்கும், பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கும் ஏழாம் பொருத்தம்! டிடிவி.தினகரன் குறித்து ஜெயகுமார் ஏதாவது பேட்டி கொடுத்தால், டிடிவி.யை முந்திக்கொண்டு ஜெயகுமாருக்கு பதிலடி கொடுப்பவர் வெற்றிவேல்தான். இவர்கள் இடையிலான மோதல், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரபரப்பு செய்தியாக மீடியாவில் வந்தது.
வெற்றிவேல் எம்.எல்.ஏ
‘சசிகலாவால் கட்சிப் பதவி பெற்ற ஜெயகுமார், அதை ராஜினாமா செய்யவேண்டும்’ என வெற்றிவேல் குறிப்பிட்டார். அதற்கு ஜெயகுமார், ‘காங்கிரஸில் இருந்து வந்த வெற்றிவேல் அதே கோஷ்டி கலாச்சாரத்தை அதிமுக.வில் புகுத்துகிறார்’ என பதிலடி கொடுத்தார். இதற்கு வெற்றிவேல், ‘ஜெயகுமார் குடும்பத்தில் யார், யார் எந்தக் கட்சியில் இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர் வாயை அடக்காவிட்டால், பல ரகசியங்களை நான் சொல்லவேண்டியிருக்கும்’ என கூறினார்.
இந்தச் சூழலில் சென்னை கொடுங்கையூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று ( ஆக. 17) சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிதி அமைச்சர் ஜெயகுமார் கலந்துகொண்டு உதவி வழங்க ஏற்பாடு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள், பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்டவர்கள். ஆனால் தொகுதி எம்.எல்.ஏ.வான வெற்றிவேலுக்கு அழைப்பு இல்லை.
விழாவில் ஜெயகுமார், வெற்றிவேல்
ஆனாலும் வெற்றிவேல் பகல் 12 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் வந்தார். அதிரடி மனிதரான வெற்றிவேலின் திடீர் வருகையால் அதிகாரிகள் கலக்கம் அடைந்தனர். அவரை விழா நடைபெறும் பகுதிக்கு அனுமதிக்காமல் ஒரு அறையில் உட்கார வைத்தனர். பிறகு கலெக்டர் அன்புசெல்வன் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தன்னை விழாவுக்கு அழைக்காதது குறித்து வெற்றிவேல் கடிந்துகொண்டதாக தெரிகிறது.
எனினும், விழாவில் பிரச்னை உருவாக்க தான் வரவில்லை என்றும், அதில் பங்கேற்கவே வந்தேன் என்றும் வெற்றிவேல் கூறினார். அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜெயகுமாரிடம் இது குறித்து அதிகாரிகள் பேசினர். விழாவில் வெற்றிவேல் பங்கேற்க அவரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இருவரும் கலந்துகொண்டு உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சி முடியும் வரை அதிகாரிகளும், அதிமுக.வினரும் பதற்றம் குறையாமலேயே இருந்தார்கள். பிரச்னை இன்றி கூட்டம் நிறைவு பெற்றதுமே நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.