/tamil-ie/media/media_files/uploads/2017/09/ops-dinakaran_3144789g.jpg)
மதுரை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எதிராக, அங்கு கூடியிருந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் கோஷமிட்டு தகராறில் ஈடுபட்டதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, பிரச்சனையில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
துணை முதலைமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், வியாழக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதேபோல், இதற்கு அடுத்த விமானத்தில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் வந்தார். இந்நிலையில், அவர்களை வரவேற்க இருவருடைய ஆதரவாளர்களும் விமான நிலையத்தில் குழுமியிருந்தனர்.
இந்நிலையில், தனி விமானம் மூலம் விமான நிலையத்திற்கு முதலாவதாக வந்தடைந்த ஓ.பன்னீர் செல்வத்துக்கு, அங்கு கூடியிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக முழக்கமிட்டு பிரச்சனையில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களுக்கும், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும், காவல் துறையினருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அவர்களை காவல் துறையினர் சமாதானப்படுத்திய பின்னர், ஓ.பன்னீர் செல்வம் அங்கிருந்து கார் மூலம் தன் சொந்த ஊரான பெரியகுளத்திற்கு புறப்பட்டு சென்றார்.
இதையடுத்து, சற்று நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்த டி.டி.வி. தினகரன் தன் ஆதரவாளர்களுடன் புறப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.