ஆட்சியின் ஆட்டம் முடிவுக்கு வரவுள்ளதால் கோபத்தில் உச்சியில் ஆட்சியாளர்கள் இருக்கின்றனர் என்றும், அதனால் தான் தன் மீது தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்படுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் அடையாரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறும்போது: 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் எங்கள் தரப்பில் நியாயம் இருப்பதால், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற உத்தரவு வரும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
உங்கள் மீது தொடர் வழக்குகள் குறித்து?
என் மீது தொடர்ந்து பொய் வழக்கு பதியப்பட்டு வருகின்றது. சேலம் மாவட்டத்தில் என் மீது போடப்பட்டுள்ளது. அதில் நோட்டீஸ் யார் அடித்தார் என்றே தெரியவில்லை. அந்த நோட்டீஸில் பொதுச்செயலாளர் என்கிற முறையில் சசிகலா படம், துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனது படம் இடம் பெற்றுள்ளது. அந்த நோட்டீஸில் இடம்பெற்றவற்றை பார்த்தால், தேச துரோக வழக்கு போடும் அளவிற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை என்பதை தான் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால், முதலமைச்சர் கே எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புடையவர்கள் தான் இவ்வாறு வழக்கு பதிவு செய்ய தூண்டியுள்ளனர்.
இது போன்ற வழக்குப் பதிவுக்கு நான் ஒருபோதும் பயப்பட மாட்டேன். நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்தவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பேன். கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை, துணைப் பொதுச்செயலாளர் பெயரை தொண்டர்கள் பயன்படுத்துவது என்பது சாதாரணமான விஷயம் தான். ஆனால், அதற்கெல்லாம் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் மீது வழக்குப் பதிவு போடலாமா? அப்படிப் பார்த்தால் தினமும் ஒரு வழக்கு போடலாமே.
கைது செய்யட்டும்
இதுபோன்ற பொய் வழக்குகளுக்கு பயந்து கொண்டு நான் முன்ஜாமீன் எடுக்கப்போவதில்லை. வழக்கு வரட்டும், கைது செய்யட்டும். போலீஸ்காரர் என்ற பவர் இருப்பதால் தானே அவ்வாறு அவர் செயல்படுகிறார், அவர் மீதும் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன். என் உத்தரவின்படியே நோட்டீஸ் அடிக்கப்பட்டதாக காவல்துறை எழுதி வாங்கியிருக்கின்றனர்.
காவல்துறை தங்கள் எல்லையை மீறி செயல்பட்டால், நீதிமன்றத்தை நாடி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். சட்டம் தன் கையில் இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என நினைக்கிறவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருப்பவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்போம்.
ஆட்சியின் ஆட்டம் முடிவுக்கு வரவுள்ளதால், கோபத்தில் உச்சியில் இருக்கின்றனர். பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள் என்பார்கள் அதுபோல தான் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர்.
சசிகலா பரோல்
போதுமான ஆவணங்கள் இல்லை என்பதல் தான் பரோல் நிராகரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் சசிகலாவிற்கு ஜாமீன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.