டிடிவி தினகரன் மீதான வழக்கை தேர்தல் ஆணைத்துடன் இணைத்து ஒப்பிட வேண்டாம் என பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகாரால் ரத்து செய்யப்பட்டது. இடைத்தேர்தல் சமயத்தின் போது இரட்டை இலை சின்னத்திற்கு ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் உரிமை கொண்டாடியது. இது தொடர்பாக தேர்தல் ஆணைத்திடம் ஓபிஎஸ் தரப்பு புகார் அளித்தது. இரண்டு தரப்பு விளக்கங்களையும் பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கியது.
இதனிடையே, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக, டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், தில்லி போலீஸார் டிடிவி தினகரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரான சுப்ரமணிய சுவாமி கருத்து தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னத்தை மீட்கும் வகையில் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் யாருக்காவது லஞ்சம் கொடுக்க முயற்சி செய்திருந்தால், அது தொடர்பாக சட்டவிதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால், இந்த விவகாரத்தில் போலீசார் விசாரணையில், அவர் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. எனவே, சட்டவிதிகளின்படியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குற்றப்பிரிவு போலீஸார் அதனை தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு படுத்தக் கூடாது.
டிடிவி தினகரன் மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள் ஹவாலா குற்றச்சாட்டில் ஈடுபட்டிருந்தால், தில்லி போலீசார் இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்துடன் தொடர்பு படுத்தக்கூடாது.
இந்த வழக்கை என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முயவில்லை. சசிகலா தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியிருந்தால் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளலாம். அமைப்பு ஒன்றுக்கு லஞ்சம் கொடுப்பது மற்றும் ஹவாலா பரிவர்த்தனை மேற்கொள்வது இவை இரண்டுமே தனித்தனியான வழக்குகள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து விசாரணை மேற்கொள்வது சரியாகாது.
தேர்தல் ஆணையமானது இரட்டை இலை சின்னம் தொடர்பாக தவறான முடிவை எடுத்ததாகவே தெரிகிறது. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் சசிகலா தரப்பில் இருக்க, ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கேட்பது விந்தையாக இருக்கிறது என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.