தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் மீனாட்சிபட்டி கிராமம் உள்ளது. மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று முன்தினம் இரவு நான்கு மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
மர்ம நபர்கள் சேதப்படுத்தி விட்டு சென்றது அருகில் இருக்கும் கோவிலில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம் - தூத்துக்குடி சாலையில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஶ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி மாயவன் தலைமையில் ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை சேதப்படுத்திய அருகில் உள்ள அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil