'நீட் மட்டும்தான் உலகமா?'- த.வெ.க. கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று (மே 30) நடைபெற்றது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா இன்று (மே 30) நடைபெற்றது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tvk vijay

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழகம், புதுச்சேரியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சட்டசபை தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில் த.வெ.க. சார்பில் கல்வி விருது வழங்கும் விழா 3 ஆவது ஆண்டாக இன்று (மே 30) நடைபெற்றது.  

Advertisment

இவ்விழாவிற்கு 600க்கும் மேற்பட்ட மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 2000 பேர் பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டனர்.வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தனி அடையாள அட்டைகள் மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு சுட சுட சைவ காலை உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பிஸ்கட், தண்ணீர் பாட்டில், ஜீஸ் அனைத்தும் வழங்கப்பட்டது.

இது முற்றிலும் கல்வி சார்ந்த நிகழ்ச்சி என்பதால் நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்ச்சியில் கட்சிப் பதாகைகள் இருக்கக் கூடாது என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisment
Advertisements

காலை 9.30 மணியளவில் நிகழ்ச்சிக்கு வந்த த.வெ.க தலைவர் விஜய் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின் நிகழ்ச்சி தொடங்கியதும் விஜய் மேடையில் ஏறி பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உடன் பேசியதாவது,  

"படிப்புல சாதிக்கனும், படிப்பும் சாதனை தான், அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் நம்ம சாதித்தே ஆக வேண்டும் என நினைப்பது சாதனை கிடையாது. ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசிக்காதீங்க. அவ்வளவு மன அழுத்தம் ஆக வேண்டிய அவசியமில்லை. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கு. அதனால் இப்போவே உங்க மனசை பலமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஜனநாயகம் என்று ஒன்னு இருந்தா தான் இந்த உலகமும் சரி, இந்த உலகத்தில் உள்ள எல்லா துறையும் சுதந்திரமாக இருக்க முடியும். முறையான ஜனநாயகம் இருந்தால் போதும் எல்லாருக்கும் எல்லாமும் சரிசமமா கிடைக்கும். அதன் முதல் படியாக, உங்கள் வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்லுங்கள், அவரவர்களின் ஜனநாயக கடமையை ஒழுங்கா செய்ய சொல்லுங்க.

ஜனநாயக கடமையை செய்யுறது பெரிய விஷயமல்ல. சாதாரணமான விஷயம் தான். நல்லவங்க, நம்பிக்கையானவங்க, இதுவரைக்கும் ஊழலே செய்யாதவங்க, யாருன்னு பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லுங்க. 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு விழாவில், நான் பேசும்போது, காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயிச்சிடலாம்னு நினைக்குறாங்கல்ல. அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்குவிக்காதீங்க. யாரும் காசு வாங்காதீங்க. உங்க பெற்றோரிடமும் எடுத்து சொல்லுங்கன்னு சொல்லிருந்தேன். அதை நீங்களும் அப்படியே பாலோ பண்ணுங்க.

நீங்க வேணா பாருங்க, அடுத்த வருஷம் வண்டி, வண்டியா வந்து கொட்டப்போறாங்க. அது அத்தனையும் உங்ககிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் தான். என்ன பண்ணனும்னு உங்களுக்கு கரெக்டா தெரியும். அது நான் சொல்லி தான் புரிய வைக்கனும்னு அவசியமில்ல. பெற்றோர்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள், உங்க குழந்தைகளோட விஷயத்தில் அவர்களை எதிலும் அழுத்தம் கொடுக்காதீர்கள். அவங்களுக்கு என்ன பிடிச்சிருக்குனு தெரிஞ்சுகிட்டு அதற்கு ஏற்ற மாதிரி வழிநடத்துங்க.

எத்தனை தடைகள் வந்தாலும், அவரவர்களுக்கு பிடித்த விஷயத்திலோ, பிடித்த துறையிலோ எல்லாரும் கண்டிப்பா சாதிச்சு காட்டுவாங்க. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், சாதி, மதத்தை வைத்து பிரிவினை ஏற்படுத்தும் சிந்தனை பக்கம் சென்றுவிடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள்.

தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்த பொருள்களை உற்பத்தி செய்கிறார்கள். இவ்வளவு ஏன் இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கா? மதம் இருக்கா? போதை பொருட்களை எப்படி ஒதுக்கி வைக்கிறீர்களோ, அதே போல் சாதி, மதத்தையும் தூரமா ஒதுக்கி வச்சிடுங்க. அதுதான் நம்ம எல்லாருக்குமே நல்லது.

சமீப காலமாக தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயல்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுகிற மாதிரி ஒரு கேள்வி கேட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த உலகத்தில் எது சரி? எது தவறு? என்பதை பகுப்பாய்வு செய்து பார்த்தாலே போதும், ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கை வாழலாம்.

டெக்னிக்கல் மற்றும் அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள். ஏற்கனவே வந்துவிட்ட ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை எதிர்கொள்வதற்கு அதுதான் ஒரே வழி. ‘எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா’ என்கிற பாசிடிவ் அப்ரோச் ஓடவே செல்லுங்கள். தைரியமா இருங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்" என்று விஜய் பேசினார்.

TVK Actor Vijay

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: