Advertisment

இரட்டை இலை சின்னம் வழக்கு தள்ளிப் போகும்? 3 வார அவகாசம் கேட்டு டிடிவி அணி முறையீடு

இரட்டை இலை சின்னம் வழக்கு தள்ளிப் போகிறது. காரணம், 3 வாரங்கள் அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் டிடிவி.தினகரன் அணி முறையீடு செய்துள்ளது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
two leaves symbol case to postpone, ttv dhinakaran urges 3 weeks time for affidavits in two leaves symbol case, ttv dhinakaran faction petition to election commission of india

இரட்டை இலை சின்னம் வழக்கு தள்ளிப் போகிறது. காரணம், 3 வாரங்கள் அவகாசம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தில் டிடிவி.தினகரன் அணி முறையீடு செய்துள்ளது.

Advertisment

இரட்டை இலை சின்னத்தை கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது. அதைத் தொடர்ந்து அதை மீட்க சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மற்றொரு தரப்பாகவும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.

சசிகலா தரப்புக்கு ஆதரவாக அடிப்படை உறுப்பினர்கள் முதல் தலைமைக்கழக நிர்வாகிகள் வரை சுமார் 7 லட்சம் அபிடவிட்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல ஓபிஎஸ் தரப்பிலும் லட்சக்கணக்கில் அபிடவிட்களை தாக்கல் செய்தார்கள். இதில் எந்த முடிவையும் எடுக்காமல் தேர்தல் ஆணையம் காலம் கடத்தியது.

இந்தச் சூழலில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்த வழக்கில், அக்டோபர் 31-க்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வரும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அந்த உத்தரவின் அடிப்படையில் வழக்கில் சம்பந்தப்பட்ட சசிகலா, டிடிவி.தினகரன், மதுசூதனன், ஒபிஎஸ் ஆகிய நால்வருக்கும் செப்டம்பர் 21-ம் தேதி தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

அதில், கூடுதலாக தாக்கல் செய்ய விரும்பும் ஆவணங்களை செப்டம்பர் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி கூறியிருக்கிறது. இதற்கிடையே இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்துகொண்டு, சசிகலா தரப்பை தனிமைப்படுத்தியிருக்கின்றன. செப்டம்பர் 12-ம் தேதி இந்த இரு தரப்பும் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை ஒழித்தனர்.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்.ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்.ஸும் இயங்குவது என்றும், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை இவர்கள் ஏற்றுக்கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். இந்த தீர்மான விவரங்களை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து, இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு கோரியிருக்கிறது.

இதற்காக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் பொதுக்குழு தீர்மானம் உள்ளிட்ட ஆவணங்களுடன் டெல்லி சென்றனர். அமைச்சர்களுடன் முன்பு ஓபிஎஸ் அணியின் தளகர்த்தர்களாக இருந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் டெல்லி சென்றனர். இவர்கள் இணைந்து சென்று இந்திய தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை தாக்கல் செய்தனர். வருகிற 29-ம் தேதிக்குள் மீண்டும் ஒருமுறை டெல்லி செல்லவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

அக்டோபர் 5-ம் தேதி பிற்பகலில் விசாரணைக்காக தேர்தல் ஆணையத்தில் ஆஜராகும்படி சசிகலா தரப்பையும், ஓபிஎஸ் தரப்பையும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தத் தேதியை அக்டோபர் 6-ம் தேதிக்கு மாற்றி பின்னர் அறிவிப்பு வெளியிட்டது. அதற்கு முன்பாக டிடிவி தரப்பும் புதிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ள மனுவில், ‘தங்களுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய 3 வாரங்கள் அவகாசம் வேண்டும்’ என கேட்டிருக்கிறார். அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை யாருக்கு? என முடிவு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருப்பதால், அவ்வளவு அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்குமா? எனத் தெரியவில்லை.

எனினும் மேலும் சில நாட்கள் அவகாசம் வழங்க வாய்ப்பு இருப்பதாகவே தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே திட்டமிட்டபடி அக்டோபர் 6-ம் தேதி இரு தரப்பையும் அழைத்து இறுதி விசாரணை நடைபெறுமா? என்பது கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

தேர்தல் ஆணையம் இந்த முறை இரு அணிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில், ‘ஜெயலலிதா மரணமடைந்த தினத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகளின் பட்டியலைக் கேட்டிருந்தது. தவிர, அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இனி புதிதாக அபிடவிட் தாக்கல் செய்ய முடியும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் இது டிடிவி தரப்புக்கு பின்னடைவு! இதன் காரணமாகவே டிடிவி தரப்பு அவகாசம் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.

Ttv Dhinakaran Vk Sasikala Two Leaves Symbol
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment