தஞ்சாவூரைச் சேர்ந்த பாண்டியராஜன் எனும் விவசாயி கடந்த 21ம் தேதி தன் 'பேஷன் புரோ' பைக்கில் தஞ்சாவூர் பைபாஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீஸார், பாண்டியராஜனை நிறுத்தி ஆவணங்களைப் பரிசோதித்தனர். ஆவணங்கள் சரியாக இருக்கவே, சீட் பெல்ட் அணியவில்லை எனப் போலீஸார் அதிரடியாகக் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன், 'இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் எப்படி சீட் பெல்ட் அணிய முடியும்?' என போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனினும் இந்த காரணத்திற்காக போலீஸார் ரூ. 500 அபராதம் விதித்தப் பின்னரே அவரை விடுவித்தனர்.
இந்தச் சம்பவத்தால், மனவேதனையடைந்த பாண்டியராஜன் நேற்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்துக்கு வந்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம் போலீஸார் அபராதம் விதித்தது குறித்து புகார் மனு அளித்தார்.
இது குறித்து பாண்டியராஜன் கூறுகையில், ''பொதுமக்களை மிரட்டி போலீஸார் வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். அபராதம் என்ற பெயரில் நிந்திக்கின்றனர். இதுபோன்ற நிலை இன்னொருவருக்கு ஏற்படக் கூடாது என்பதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.