ரயில் தண்டவாளத்தில் டயர் விவகாரம்; 8 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்பட்டிருந்த டயர் யாருடைய என்பது குறித்து விசாரணை செய்தபோது அந்த டயர் ரயில் பாதை அருகே வசிக்கும் கலையரசன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி ரயில் தண்டவாளத்தில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க லாரி டயரை வைத்து சதி செய்ததில் செல்போன் டவர் சிக்னலை வைத்து சந்தேகத்தின் பேரில் 8 நபரை போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
Advertisment
கடந்த 2 ஆம் தேதி இரவு கன்னியாகுமரியில் இருந்து திருச்சி மார்க்கமாக சென்னைக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. நள்ளிரவு 1 மணி அளவில் வாளாடி ரயில் நிலையம் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது சமூக விரோதிகள் யாரோ சிலர் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே டயரை போட்டுள்ளனர்.
இதைக் கண்ட ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் வேகத்தை குறைத்தார். ஆனால் டயர், ரயில் என்ஜினில் மாட்டியதால் இன்ஜினின் மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி ரயில் நின்றது.
இதுகுறித்து ரயில் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாச்சலம் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அதேநேரம் அந்தப்பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வரும் சூழலில் இந்த அசம்பாவித சம்பவம் நடைபெற்றதால், அப்பகுதி பொதுமக்கள் யாரேனும் இந்த சதிச்செயலை செய்திருக்கலாம் எனக் கருதி அப்பகுதியினரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்த இடத்தில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரில் சென்று விசாரணை செய்து, இந்த சதி செயல் குறித்து விசாரிக்க டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்தியிருந்தார்.
மேலும், சுரங்கப்பாதைக்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார்களா? அல்லது தீவிரவாத அமைப்பினர் யாராவது ரயிலை கவிழ்க்க சதி செய்தார்களா? என்பது போன்ற பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வந்த நிலையில், நேற்று முன் தினம் அப்பகுதியை சேர்ந்த 3 சிறுவர்களிடம் சந்தேகத்தின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை செய்தனர். ஆனால், அந்த மூன்று பேருக்கும் இந்த சதி செயலில் தொடர்பில் என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்பட்டிருந்த டயர் யாருடைய என்பது குறித்து விசாரணை செய்தபோது அந்த டயர் ரயில் பாதை அருகே வசிக்கும் கலையரசன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து தனிப்படை போலீசார் கலையரசனை பிடித்து விசாரணை செய்ததில் கலையரசனுக்கு சொந்தமான லாரியின் டயர் பழுதடைந்ததால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லாரிக்கு புதிய டயரை மாற்றி விட்டு லாரியிலிருந்து பழைய டயரை கழற்றி அவர் வீட்டின் முன்பு வைத்திருந்தேன். அது கடந்த வாரம் காணாமல் போனதாகவும் வேறு ஏதும் தமக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ளார்.
கலையரசன் வீட்டு முன்பு வைத்திருந்த அந்த டயரை வேற யாரோ சமூக விரோதிகள் தான் எடுத்து தண்டவாளம் நடுப்பகுதியில் வைத்துள்ளனர் என்பதை உறுதி செய்த போலீஸார், சம்பவம் நடைபெற்ற 4 மணி நேரத்திற்கு முன்பில் இருந்து ரயில் தண்டவாளம் பகுதியில் நடமாடிய செல்போன் எண்களை ஆய்வு செய்யத் துவங்கினர்.
லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையான தனிப்படை குழுவினர் செல்போன் டவர் சிக்னலை வைத்து விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த 8 பேரின் செல்போன் எண்கள் சம்பவம் நடைபெற்றப் பகுதியில் இரவு நேரத்தில் பதிவாகியிருந்ததால் சந்தேகத்தின் பேரில் 8 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“