/indian-express-tamil/media/media_files/2025/10/17/vairamuthu-kanimozhi-2025-10-17-19-55-13.jpg)
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி.,யின் தாயார் ராஜாத்தி அம்மாளை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும், தி.மு.க எம்.பி. கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இவருக்கு அண்மை காலமாகவே அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலி பிரச்சினை இருந்து வருகிறது. இதற்காக கடந்தாண்டு ஜெர்மனியில் உள்ள பிரபல மருத்துவமனைக்குச் சென்று 20 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்று இருந்தார்.
இந்தநிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது, உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, சிகிச்சைக்குப் பின்னர் ராஜாத்தி அம்மாளின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கவிஞர் வைரமுத்து அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று ராஜாத்தி அம்மாளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எம்.பி கனிமொழியும் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
”அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் திருமதி ராஜாத்தி அம்மையார்
நேரில் பார்த்தேன்; சிறிதுநேரம் உரையாடினேன்
கனிமொழியும் நானும் நகைச்சுவைச் சொல்லாடலில் அவரைக் கொஞ்சம் சிரிக்க வைத்தோம்
நன்கு தேறி வருகிறார்
கனிமொழி எம்.பி-யிடம் மருத்துவக் குறிப்புகள் கேட்டறிந்தேன்
விரைவில் வீடுதிரும்புக என்று வாழ்த்தி விடைகொண்டேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.