மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், அவரது நினைவில்லமாக மாற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த நிலையில், அதற்கான பணிகளை தமிழக அரசு துவங்கியது. அதன் முதல்கட்டமாக, வேதா இல்லத்தை அளவெடுக்கும் பணிகளை வருவாய் துறை அதிகாரிகள் துவங்கினர்.
கடந்த வியாழக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றி, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்படும் என அறிவித்தார். மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
இதில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற எதிர்க்கட்சிகள் வரவேற்றனர். ஆனால், அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தரப்பினர் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். ”வேதா இல்லம் எங்கள் பூர்வீக சொத்து. இதனை வாங்கவோ, விற்கவோ யாருக்கும் உரிமை இல்லை. இந்த இல்லத்திற்கு உரிமையானவர்களான எங்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பாமல் முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதை எதிர்த்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பேன்.”, என தீபா கூறியிருந்தார். அதேபோல், ”வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என சுயநலத்திற்காக அவசர கதியில் அறிவிக்கப்பட்டுள்ளது”, என டி.டி.வி. தினகரன் கூறியிருந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/veda1.png)
அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணிகளை தமிழக அரசு துவங்கியது. அதன் முதல் கட்டமாக வேதா இல்லத்தை அளவெடுக்கும் பணிகளை வருவாய் துறையினர் துவங்கினர். இதை முன்னிட்டு, வேதா இல்லம் முன்பு கூடுதல் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மயிலாப்பூர் வட்டாட்சியர் தலைமையில், ஏழு பேர் குழு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில் அதற்கான பணிகளில் தமிழக அரசு மும்முரமாக இறங்கியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/vetha.png)
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பல முக்கிய அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்கும் களமாக இருந்தது. கட்சி மற்றும் ஆட்சி என இரண்டிலும் முக்கிய முடிவுகளை ஜெயலலிதா வேதா இல்லத்திலிருந்துதான் பல சமயங்களில் எடுத்தார். அதிமுக கட்சியின் அதிகார மையமாக அந்த இல்லம் விளங்கியது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா அந்த இல்லத்தில் தங்கி முக்கிய முடிவுகளை அறிவித்தார். அதன்பின், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றார். இதையடுத்து, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வேதா இல்லத்தை பராமரித்து வந்தார்.