ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்க முயன்ற வேலூர் மாநகராட்சி கமிஷ்னரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் வேலபாளையத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வந்தார். கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பணிகளுக்காக இவருக்கு டெண்டர் தொகை ரூ.10.23 லட்சம் வழங்கப்பட வேண்டும்.
இதற்கான காசோலையை வேலூர் மாநகராட்சி கமிஷ்னர் குமாரிடம் கேட்டுள்ளார். அப்போது, கமிஷ்னர் குமார் தனக்கு 2 சதவீத கமிஷனாக ரூ.22 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு, ரூ.20 ஆயிரம் தருவதாக பாலாஜி ஒப்புக் கொண்டுள்ளார்.
இதனிடையே, பாலாஜி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைபடி, பாலாஜி ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை குமாரிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.