புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் இன மக்களுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உடனடியாக வேங்கைவயல் கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு நீண்ட காலமாக சாதியப் பாகுபாடு நடைபெற்று வருவது வெளிச்சத்திற்கு வந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள், பொது மக்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை எனவும் தாங்கள் துன்புறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை 68 பேரிடம் விசாரணை நடத்தி இருப்பதாகவும், சாட்சியங்களின் அடிப்படையில் வேங்கைவயல் கிராம மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/