கடந்த மூன்று நான்கு நாட்களாகவே விஜய் குறித்த பிகில் சத்தம் வழக்கத்தைவிட அதிகமாகவே நமக்கு கேட்கிறது. பொதுவாக விஜய்யின் படம் தயாரிப்பில் இருக்கும் போது, இந்தளவுக்கு விளம்பரம் இருக்காது. ஆனால், அட்லீ இயக்கத்தில் விஜய் கமிட்டானதில் இருந்தே 'பிகில்' விளம்பரம் டாப் ரேங்கிங்கில் உள்ளது. முக்கிய காரணம், மார்க்கெட்டிங்கில் பின்னிப் பெடலெடுப்பவரும், ஏஜிஎஸ் பொழுபோக்கு பிரிவு தலைமை செயல் அதிகாரியும், பிகில் தயாரிப்பாளருமான அர்ச்சனா கல்பாத்தி என்பது நமக்கு விளங்குகிறது.
ஆனால், மார்க்கெட்டிங்கில் பிகிலை விட முன்னணியில் இருக்கும் பெயர் விஜய் தான். 'பாகவதர், ரஜினிக்கு பிறகு நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டார்' அவரது அம்மா ஷோபா சந்திரசேகர் பாசத்துடன் கடிதம் வரைய, சீமான் ஒருபடி மேலே போய், 'ரஜினியின் மார்க்கெட்டை எப்போதோ விஜய் காலி செய்துவிட்டார்; விஜய் தான் இனி சூப்பர் ஸ்டார்; யார் யாரோ அரசியலுக்கு வராங்க... விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' என்று போடு போட சமூக தளங்கள் பற்றிக் கொண்டது.
டிவி விவாத நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு கட்சியினரும், 'விஜய் அரசியலுக்கு வந்தால் எங்கள் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை' என்ற ரீதியில் கருத்துகளை பொழிய, 'நான் செவனேன்னு தானடா இருந்தேன்' மோடில் விஜய் இருக்கிறார்.
இந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மறைந்த கருணாநிதியின் மகள் செல்வி- செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்திக்கு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இதில், திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில், துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏனெனில், கடந்த கால கசப்புகளை இரு தரப்பும் இந்நிகழ்ச்சி மூலம் மறந்துவிடும் என்று கருதப்படுகிறது. விஜய் - திமுக இடையே வாய்க்கா வரப்பு பிரச்சனை எல்லாம் இல்லை. ஆனால், 'காவலன்' பட ரிலீஸின் போது சில விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேறின. அப்போது ஆட்சியில் இருந்தது திமுக.
ரிலீஸாக வேண்டிய அன்றைய நாளில், தமிழகம் முழுவதும் எந்த தியேட்டரிலும் அப்படம் திரையிடப்படவில்லை. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கலவரத்துடன் காத்திருக்க காலை 11 மணிக்கு மேல் தான் ரிலீஸ் ஆனது. மறைமுகமாக திமுக தரப்பினர் மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், அதற்கான காரணம் குறித்து விஜய் இதுவரை வாய்த் திறக்கவில்லை.
காவலனுக்கு முன்பாக அப்படியொரு பெரிய ரிலீஸ் பிரச்னையை விஜய் சந்தித்ததே இல்லை. ஆனால், அதன்பிறகு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு படத்திற்கும் விஜய் காவலனை விட பல மடங்கு வீரியமிக்க பிரச்சனைகளை சந்தித்து, 'இப்போ எவ்ளோ பேரு வேணாலும் வாங்கடா' என்ற அளவுக்கு பக்குவமாகிவிட்டார்.
துப்பாக்கி, தலைவா, கத்தி, புலி, மெர்சல், சர்கார் வரை ஒவ்வொரு படத்திற்கும் டிசைன் டிசைனாக பிரச்சனைகள் வந்தது. அதிலும் சர்கார் உச்சக்கட்டம். அரசாங்கத்தின் நலத்திட்டங்களை அப்படத்தில் விமர்சித்ததாக சொல்லி தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களின் விஜய்யின் பேனர்கள் உடைப்பு, போஸ்டர்கள் கிழிப்பு என பெரிய கலவரமே அரங்கேறியது.
இவ்வளவு ஏன்... படப் பிரச்சனை லிஸ்டில் அடுத்து வெளிவர உள்ள பிகில் கூட இணைந்துவிட்டது. கதை திருட்டு பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
நிலைமை இப்படியாக இருக்க, திமுக இல்ல விழாவில் விஜய் கலந்து கொண்டிருப்பது அரசியல் அரங்கில் முக்கியமான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்த டாபிக் ஒருபக்கம் இருந்தாலும், விஜய்யின் தற்போதைய சினிமா மார்க்கெட்டை வைத்து பார்க்கும் போது, அடுத்த 7-8 ஆண்டுகளுக்கு அரசியல் என்ட்ரி கொடுக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. இதனால், திமுகவுடனான பிணக்கம் இந்த தளபதி - தளபதி சந்திப்பின் மூலம் இணக்கமாக உருமாறும் பட்சத்தில், இரு தரப்புக்குமே தற்போதைய சூழலில் அது ஆதாயம் தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
ஆக......