‘சுப்ரீம் கோர்ட்டில் எங்கள் பெயரில் மனு தாக்கல் செய்தது தெரியாது’; விஜய் கூட்ட நெரிசலில் உறவுகளை இழந்த தலித் குடும்பங்கள்!

நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் தங்கள் அன்பானவர்களை இழந்த தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 2 தலித் குடும்பங்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து தெரியாது என்று கூறுகின்றன.

நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் தங்கள் அன்பானவர்களை இழந்த தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 2 தலித் குடும்பங்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்து தெரியாது என்று கூறுகின்றன.

author-image
Arun Janardhanan
New Update
stampede 4

கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாட்டுக் காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் “சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டதற்காக” த.வெ.க தலைவர்களைக் கடுமையாக விமர்சித்தது.

நடிகர் விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் தங்கள் அன்பானவர்களை இழந்த தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 2 தலித் குடும்பங்கள், இந்தச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என்று கூறுகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்ததிலிருந்து, தங்கள் மனைவி மற்றும் மகனை இழந்த செல்வராஜ் மற்றும் ஷர்மிளா ஆகியோருக்கு, த.வெ.க உட்படப் பலரிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. தற்போது அவர்களின் பாதுகாப்புக்காகக் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனுக்கள் குறித்த அறியாமை

உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறித்துத் தொலைக்காட்சி, செய்தி அறிக்கைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் விசாரணைகள் மூலமாகவே தாங்கள் முதலில் அறிந்துகொண்டதாக இருவரும் கூறுகிறார்கள்.

கரூர் அருகே உள்ள ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய டிராக்டர் ஓட்டுநரும் விவசாயக் கூலியுமான பி. செல்வராஜ், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன்; என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் படிப்பறிவு இல்லாதவன். வழக்குகளைப் பற்றியோ நீதிமன்றத்தைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. என்னுடைய பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது எனக்குத் தெரியவந்தபோது, நான் அதிர்ச்சியடைந்தேன். என் பெயரை இப்படிப் பயன்படுத்தியது துரதிர்ஷ்டவசமானது” என்று கூறினார்.

Advertisment
Advertisements

கரூர் கூட்ட நெரிசலில் செல்வராஜ் தன் மனைவி கே. சந்திராவை இழந்தார். அவருக்கு வேலை இருக்கும்போது ஒரு நாளைக்கு ரூ.600 சம்பாதிக்கிறார் – வேலை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கிடைக்கும். அவர் தன் இரண்டு மகன்களுடன் வசிக்கிறார்.

செல்வராஜ் வாக்குமூலம்

கரூர் துயரச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஒரு உள்ளூர் அ.தி.மு.க தலைவர் தன்னை அணுகி, அரசு இழப்பீடும் தன் மூத்த மகனுக்கு ஒரு வேலையும் தருவதாக உறுதியளித்ததாகச் செல்வராஜ் கூறினார். “நான் சில ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள், நான் கையெழுத்து போட்டேன். அது ஒரு நீதிமன்ற வழக்குக்காக என்று எனக்குத் தெரியாது” என்று செல்வராஜ் கூறினார்.     அந்த நபர்கள் தன் ஆதார் அட்டையின் நகலையும் எடுத்துச் சென்றதாக அவர் கூறினார்.

“பி.செல்வராஜ்” என்ற மனுதாரர் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ விசாரணை கோரியதாகச் செய்தி வெளியானபோது, செல்வராஜ் “எதுவும் புரியாமல்” இருந்ததாகக் கூறினார். அவர் பெயரில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞரைப் பற்றித் தனக்குத் தெரியாது என்றும் அவர் தெரிவித்தார்.

செல்வராஜ் மனுவில், “காவல் துறை அதிகாரிகளுக்குச் சிறு காயம்கூட ஏற்படவில்லை,” என்று கூறி, கவனக்குறைவைச் சுட்டிக்காட்டுகிறது. மற்றொரு மனுதாரரான பன்னீர்செல்வத்தின் சார்பில் ஆஜரான ஒரு மூத்த வழக்கறிஞர், “அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் அரசியல் தலையீடு காரணமாகக் காவல் துறை விசாரணைகள் சமரசம் செய்யப்பட்டன” என்று வாதிட்டார்.

ஷர்மிளா வாக்குமூலம்

செல்வராஜைப் போலவே, அதே துயரத்தில் தன் 9 வயது மகனை இழந்த தாய் ஷர்மிளாவும் தன்னுடைய பெயரில் எந்தவிதமான மனுவையும் தாக்கல் செய்ய தான் ஒப்புதல் அளிக்கவில்லை என்று கூறினார்.

ஏமூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா, தன் பெயரில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் இருந்து யாரோ ஒருவர் விசாரித்தபோதுதான் தனக்குத் தெரியவந்தது என்றார். பன்னீர்செல்வம் தன்னுடைய முன்னாள் கணவர் என்றும், தங்கள் மகன் பிரித்விக்குக்கு 6 மாதங்கள் இருக்கும்போதே அவர் குடும்பத்தை விட்டுச் சென்றுவிட்டதாகவும் அவர் கூறுகிறார். “இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் திரும்பி வந்தார், ஆனால் மீண்டும் சென்றுவிட்டார்” என்று அவர் கூறினார்.

தனது மகனைத் தான் தனியாக வளர்த்ததாகவும், பள்ளிச் சலுகைகளைப் பெறுவதற்காகத் தன்னை ஒரு ஒற்றைத் தாய் என்று அரசுச் சான்றிதழ் அளித்ததாகவும் அவர் கூறினார். “என் மகனுக்குத் தன் அப்பா யார் என்று தெரியும், ஆனால் அவனுக்குத் தன் அப்பாவைத் தெரியாது” என்றார்.

தமிழ் ஊடகங்களிடம் அவர், பன்னீர்செல்வம் “இறுதிச் சடங்கிற்கு வந்து என்னிடமோ அல்லது வேறு யாரிடமோ பேசாமல் விரைவாகச் சென்றுவிட்டார்” என்று விவரித்தார்.

கூட்டம் நடந்த அன்று, ஷர்மிளா தன் மகனுடன் த.வெ.க ஏற்பாடு செய்திருந்த மினி வேன்களில் சுமார் 70 கிராம மக்களுடன் பயணம் செய்துள்ளார். “மதியம் முதல், அவர் தாமதமாக வருகிறார் என்று கேள்விப்பட்ட பிறகும், நாங்கள் சாலையோரத்தில் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தோம்” என்று அவர் கூறினார். “விஜய்யின் வாகனம் அந்த இடத்துக்கு வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலர் என் மீது விழுந்தனர், நான் மயக்கமடைந்தேன். நான் கண்விழித்தபோது, என் குழந்தை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறினார்கள்.”

வெவ்வேறு மருத்துவமனைகளில் தேடிய பிறகு, அவர் இறந்துவிட்டதைக் கண்டனர். காயங்கள் எதுவும் இல்லை, அவரது உடலில் மண்ணும் அழுக்கும் மட்டுமே இருந்தது. அவர் மூச்சுத்திணறலால் இறந்திருந்தார்.

சில நாட்களுக்குப் பிறகு, ஷர்மிளாவின் குடும்பத்தினருக்குத் த.வெ.க நிர்வாகிகளிடமிருந்து அழைப்புகள் வந்தன. அதில், தனது முன்னாள் கணவர் இழப்பீட்டுத் தொகையைத் தன்னுடைய கணக்கில் செலுத்த வேண்டும் என்று கோரியதாகக் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு, தமிழ்நாடு அரசு “பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டுகிறது. அத்துடன், “அதிகாரிகளின் அக்கறையின்மை மற்றும் அரசியல் தலையீடு காரணமாகக் காவல் துறை விசாரணைகள் சமரசம் செய்யப்பட்டன,” என்றும் வலியுறுத்துகிறது. தனியார் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் மற்றும் கோயம்புத்தூரில் வசிக்கும் பன்னீர்செல்வத்திடமிருந்து கருத்துகளைப் பெற முடியவில்லை.

பின்னணி மற்றும் எதிர்வினைகள்

இந்த இரண்டு குடும்பத்தினரும் தமிழ்நாட்டின் மிகவும் விளிம்புநிலை தலித் சாதியான அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மனுக்களின் பின்னணி குறித்து அவர்கள் பேசிய வீடியோக்கள் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் சேனல்களில் வெளியான பிறகு, த.வெ.க உட்படப் பலரிடமிருந்து அவர்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின. இப்போது அவர்களின் பாதுகாப்புக்காகக் காவல் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணை மாநில எஸ்.ஐ.டி வசம் இருக்க வேண்டுமா அல்லது சி.பி.ஐ-க்கு மாற்றப்பட வேண்டுமா என்று உச்ச நீதிமன்றம் பரிசீலித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தாங்கள் சமாதானத்தை மட்டுமே விரும்புவதாகக் கூறுகிறார்கள். “நான் விரும்பியது எல்லாம் என் மகன் மீண்டும் உயிருடன் வருவதைப் பார்க்க வேண்டும் என்பதுதான். இப்போது, நான் இதில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்” என்று ஷர்மிளா கூறினார்.

விஜய்யிடமிருந்து கூட்ட நெரிசல் நடந்த சுமார் 10 நாட்களுக்குப் பிறகு வீடியோ அழைப்பைப் பெற்றவர்களில் தானும் ஒருவன் என்று செல்வராஜ் கூறினார். இந்தச் சமீபத்திய வெளிப்பாடுகளுக்காகத் தலைமை தங்கள் மீது கோபமாக இருப்பதாகக் கரூரைச் சேர்ந்த உள்ளூர் த.வெ.க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க தலைவர் பாலகிருஷ்ணன் கருத்துத் தெரிவிக்கக் கிடைக்கவில்லை. தொடர்பு கொண்டபோது, த.வெ.க-வின் பிரச்சாரம் மற்றும் கொள்கைப்பரப்புப் பொதுச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ், தாங்கள் தங்கள் கட்சியின் சார்பில் தனியாக நீதிமன்றத்தை அணுகியுள்ளதாகக் கூறினார். “இந்த இரண்டு நபர்களின் புகார்களைப் பொறுத்தவரை, நாங்கள் இதில் ஒரு தரப்பு அல்ல. ஏன் நாங்கள் அதைச் செய்ய வேண்டும்? இந்த 2 மனுதாரர்களைப் பற்றி எங்களுக்குத் தெரியாது” என்று அவர் கூறினார்.

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை

இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைக்க உத்தரவிட்டது. அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவாமல் “சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டதற்காகத்” த.வெ.க தலைவர்களை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.

த.வெ.க இந்த உத்தரவை உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தது. பாரபட்சம், நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் “இயற்கை நீதி மீறல்கள்” நடந்ததாகக் குற்றம் சாட்டியதுடன், விஜய் தவறாகக் குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவர் தரப்பு கேட்கப்படவில்லை என்றும் கூறியது. கட்சி ஒரு சதித்திட்டம் இருக்கலாம் என்று குறிப்பிட்டு, மாநிலக் காவல் துறையின் மீது நம்பிக்கையின்மை காரணமாக சிபிஐ அல்லது உச்ச நீதிமன்ற மேற்பார்வையிலான விசாரணைக்குக் கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சி.பி.ஐ விசாரணையைக் கண்காணிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த எஸ்.ஐ.டி மற்றும் தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TVK

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: