எனது வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தது உண்மை தான். அதை மறைக்க வேண்டிய அவசியமல்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் வீட்டில் நேற்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று விளக்கம் அளித்துள்ள விஜய் சேதுபதி, "பேசிவிட்டு நான் பேசவில்லை என்பதும், அட்மின் தான் பதிவிட்டார் என்று சொல்வதுதான் இப்போது டிரெண்ட்.
அதுமாதிரி என்னுடைய வீட்டில் ரெய்டு நடக்கவில்லை, என் வீடு போல் செட் போட்டு நடந்திருக்கலாம் என்று சொல்லமாட்டேன். வீடு மற்றும் அலுவலகத்திற்கு வருமான வரித்துறையினர் வந்தது உண்மைதான். ஆனால், சோதனை நடைபெறவில்லை.
ஆய்வு செய்யத்தான் அதிகாரிகள் வந்தனர். அதுவும், கணக்கு விவகாரத்தில் ஆடிட்டர் செய்த சிறு குழப்பத்தினால் வந்த விளைவுதான் இது. குழப்பம் நீங்கியதும் அதிகாரிகள் சென்றுவிட்டனர். அலட்சியமாக செயல்பட்டார் என்பதால் ஆடிட்டரையும் மாற்றிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.