தஞ்சைமாவட்டம் கதிராமங்கலத்தில் எரிவாயு குழய் பதிப்பு மற்றும் எண்ணெய் கிணறு விவகாரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி குழாய் பதிப்பதற்கு பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த வந்தனர். ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளாமல் கடந்த ஜூன் 1ந் தேதி, போலீசார் உதவியுடன் ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த பணிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், கதிராமங்கலம்-பந்தநல்லூர் இடையே அமைக்கப்பட்டிருந்த எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன்காரணமாக அதிலிருந்து வெளியேறிய எரிபொருள் அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கடும் எதிர்ப்பையும் மீறி, எரிபொருள் குழாய் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் வந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அப்போது என்ஜிசி குழாயில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிடுவதர்காக போலீஸார் வந்தனர். இதனிடையே, திடீரென அங்கிருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்படதால், அங்கு வன்முறை வெடித்தது. கல்வீச்சு சம்பவங்களால் பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனிடையே, எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் தீ வைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியே கலவர பூமியாக காட்சியளித்தது.
இந்த சம்பவத்தையொட்டி, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமாக சூழ்நிலை நிலவுகிறது.