சபாநாயகர் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது என எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இதையடுத்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
ப்போது புதுவையில் முகாமிட்டிருந்த 19 எம்.எல்.ஏ.க்களில் ஓரிருவர் மட்டும் நேரில் வந்து அவர்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தனர். அதை ஏற்காத சபாநாயகர் தனபால், செப்டம்பர் 14-ம் தேதி 19 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே டிடிவி அணியில் இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், இபிஎஸ் அணிக்கு தாவினார். சபாநாயகர் தனபாலை சந்தித்தும் அவர் விளக்கம் கொடுத்தார். எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது எந்த நேரமும் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட டிடிவி தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அரசியல் சட்டம் 10-வது அட்டவணைப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் தனபால் தனது செய்திக் குறிப்பில் கூறியிருக்கிறார். சபாநாயகரின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் தனபாலின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், திமுக-வின் முதன்மை செயலாளருமான துரைமுருகன், சபாநாயகர் மீதான நம்பிக்கை சரிந்து விட்டது என தெரிவித்துள்ளார்.
ஒரு தலைபட்சமாக செயல்படும் சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களை எப்படி நியாயமாக வழி நடத்துவார் என கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன், எடப்பாடி பழனிச்சாமியை காப்பாற்ற சபாநாயகர் ஜனநாயக படுகொலை செய்துள்ளார் எனவும், சட்டப்பேரவைக்கு உண்டான பாரம்பரியத்தை குழி தோண்டி சபாநாயகர் புதைத்து விட்டார் எனவும் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார்.