உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீட் தேர்வை ஏற்கும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நாடு முழுவதும் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கேள்விகள் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்பட்டன. இது மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு தேர்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் பின் தங்கியிருந்தனர்.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கியும், மீதம் உள்ள 15 சதவீத இடங்களை சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாட திட்டத்தில் படித்தவர்களுக்கும் ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் நீதிமன்றம் சென்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கு பல்வேறு சட்டப் போராட்டங்களை சந்தித்தது. இறுதியாக, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதலில் தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்த மத்திய அரசு பின்னர், பின்வாங்கியது.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா. அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா, பன்னிரெண்டாம் வகுப்பில் 1,176 மதிப்பெண்களும், 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்றவர். ஆனால், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தார். இதனால், மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அனிதா, கடந்த 1-ம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். இதையடுத்து, தமிழகம் ,முழுவதும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நீட் தேர்வை ஏற்கும் நிலைக்கு தமிழக அரசு தள்ளப்பட்டு விட்டது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக கொங்கு மண்டலம் சென்றுள்ள பழனிசாமி, கோவை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக அரசை பொறுத்தவரை நீட் தேர்வில் முழு விலக்கு வேண்டும் என்று தான் முழு அழுத்தம் தந்தோம். கடைசி வரை போராடினோம். நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை பின்பற்ற வேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டுவிட்டது" என்றார்.