சென்னையில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் சார்பில் கூட்டம் நடைபெற்றதது.
இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சரான பரஞ்ஜோதி ஓபிஎஸ் அணியில் இன்று இணைந்தார். அவருடன் சுமார் 2000 பேர் ஓபிஎஸ் அணியில் இணைந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: எங்கள் அணியின் சார்பில் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்றவில்லை. முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அணியினர் தொடர்ந்து சசிகாலா கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு, நாடகமாடுகின்றனர்.
மேலும், அவர்கள் சசிகலாவை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக கூறி மக்களை ஏமாற்றிவருகின்றனர். பிணையில் வெளிவந்துள்ள டிடிவி தினகரனை யாரும் சந்திக்க மாட்டார்கள் என அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அவரது அணியைச் சேர்ந்தவர்கள் பலர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளனர். அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.