முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 'டெங்கு' ஏன் சேர்க்கப்படவில்லை என உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பருவமழைக்கு முன்பாக நீர்நிலைகளை தூர்வாரி வெள்ள பாதிப்பை தடுப்பதற்கான உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், தேங்கி கிடக்கும் குப்பைகளை முறையாக அகற்றி தொற்று நோய் வரமால் தடுக்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கூடுதல் மனு ஒன்றையும் அவர் தாக்கல் செய்தார். அந்த மனுவில் டெங்கு காய்ச்சலால் தமிழகம் முழுவதும் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த காய்ச்சலுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளுக்கு சென்றால் இதே காரணத்துக்காக அதிக அளவில் கூட்ட நெரிசல் உள்ளது. இதனால் பலருக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் போகிறது.
மேலும் டெங்கு காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு முதல்வரின் விரிவான இலவச காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த நோய் சேர்க்கப்படாததால் இலவச சிகிச்சை இல்லை என தெரிவிக்கின்றனர். எனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம். சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், முதல்வரின் விரிவான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 'டெங்கு' ஏன் சேர்க்கப்படவில்லை ? என கேள்வி எழுப்பினார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு எந்த மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது ? என்பது குறித்தும், பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் நதி, அடையாறு ஆகியவற்றை சுத்தப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அதேபோல குப்பைகள், கழிவு நீர் தேங்காமல் என்ன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.