பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை தொடர்ந்து அவருக்கு இந்த வழக்கில் ஜாமீன் வழங்கப்படுள்ளது.
கடந்த 2021-ல் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது ராஜேஷ்தாஸ் சிறப்பு டிஜிபியாக பணி புரிந்தவந்தார். அவர் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி புகார் தெரிவித்தார். மேலும் புகார் அளிக்கச் செல்லும் ராஜேஷ் தாஸின் வலியுறுத்தலின்பேரில் செங்கல்பட்டில் எஸ்.பி.யாக இருந்த கண்ணன் என்னை தடுத்தார் என்று புகார் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு, விழுப்புரத்திலுள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. புகாரை அடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அவருக்கு உடந்தையாக இருந்த செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் பணிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் 138 முறை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு அரசு தரப்பு சாட்சிகளான 73 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணை நடத்தி இருவர் மீதும் 400 பக்க குற்றப்பத்திரிக்கையை விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
முன்னதாக குற்றச்சாட்டுக்குள்ளான முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கண்ணன் இருவரும் நீதிமன்றத்துக்கு வருகை தந்தனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்த கண்ணனுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 17ஆம் தேதி வரை தண்டனை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கொடுத்த நாளுகுள் மேல்முறையீடு செய்து அதற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி புஷ்பராணி தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“