இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் முதற்கட்டமாக சில நகரங்களில் 5ஜி சேவையை வழங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் 5ஜி சிம் கார்டு மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செக் பாயிண்ட் மென்பொருள் நிறுவனம் 5ஜி சிம் கார்டு மோசடிகள் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. அந்த அறிக்கையின்படி, மோசடி செய்பவர்கள் ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திலிருந்து (customer care executives) அழைப்பதாக கூறி மோசடியில் ஈடுபடுகின்றனர். 4ஜி-இல் இருந்து 5ஜி சிம் கார்டு மாற்றித்தருவதாக கூறி வங்கி கணக்கு விவரங்களைப் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்.
முதலில் உங்கள் 4ஜி சிம் கார்டை 5ஜி சிம்மாக மேம்படுத்தி தருவதாக கூறி உதவு செய்வதுபோல் தொடர்பு கொள்கின்றனர். பின்னர் உங்களை நம்ப வைத்து வங்கி கணக்கு விவரங்கள், OTP, Password போன்ற தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களை பெற்று பண மோடியில் ஈடுபடுகின்றனர். வாட்ஸ்அப் லிங்க் (Link), மெசேஜில் லிங்க் அனுப்பி வங்கி கணக்கு விவரங்கள் பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆனால் 5ஜி சேவை பயன்படுத்த 5ஜி சிம் கார்டு என ஒன்று தேவையில்லை என ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
5ஜி சிம் கார்டு மோசடி அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் எச்சரிக்கின்றனர். மும்பை காவல்துறையினர் 5ஜி சிம் கார்டு மோசடி குறித்து ட்விட்டர் பதிவிட்டு எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல் மற்ற மாநில காவல்துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான லிங்க் ஏதேனும் வாட்ஸ்அப் அல்லது எஸ்எம்எஸ் மூலம் பகிரப்பட்டால் பொதுமக்கள் அதை கிளிக் செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளனர்.
செக் பாயிண்ட் மென்பொருள் கூறுவது என்ன?
செக் பாயிண்ட் மென்பொருள் நிறுவனம் மோசடியில் இருந்து தப்பிக்க சில பாதுகாப்பு டிப்ஸ் வழங்கி உள்ளது. வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கியமான தகவல்களுக்கு வலுவான பாஸ்வேர்ட் (strong passwords) அமைக்க வேண்டும். கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் (two-factor authentication) செயல்படுத்த வேண்டும். மோசடிகளை கண்டறிய சாப்ட்வேர்யை அப்டேட் செய்ய வேண்டும். மென்பொருளை சமீபத்திய வெர்ஷனுக்கு புதுப்பித்து வைக்க வேண்டும்.
செக் பாயிண்ட்டின் த்ரெட் இன்டெலிஜென்ஸ் அறிக்கை படி, கடந்த ஆறு மாதங்களில் உலக சராசரியான 1167 பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாரத்திற்கு 1742 முறை பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.