இந்தியாவில் 5ஜி இணைய சேவையை பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 1) தொடங்கி வைத்தார். டெல்லியில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் தொடங்கி வைத்தார். ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவையை படிப்படியாக பயனர்களுக்கு வழங்க உள்ளது. ஜியோ தீபாவளிக்குள் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தும் எனக் கூறியுள்ளது. 5ஜி ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88,000 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஜியோ ‘ஸ்டேண்ட்அலோன்’ (standalone)’ முறையில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்துகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி திட்டங்களை இந்தியாவில் தீபாவளிக்குள் அக்டோபர் 22 முதல் 26-க்குள் கொண்டு வர உள்ளது. முதற்கட்டமாக 4 நகரங்களில் அறிமுகப்படுத்துகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் அறிமுகப்படுத்துகிறது. இருப்பினும் இந்த நகரங்களிலும் அனைத்து பகுதிகளிலும் 5ஜி பெற முடியாது.
2023 டிசம்பரில் நாட்டின் மற்ற நகரங்களும் படிப்படியாக 5ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் இன்று முதல் 8 நகரங்களில் 5ஜி சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அவை எந்த 8 நகரங்கள் எனக் குறிப்பிடவில்லை. இருப்பினும் மும்பை மற்றும் டெல்லி போன்ற மெட்ரோ நகரங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர்டெல் நிறுவனம் மார்ச் 2024க்குள் இந்தியா முழுவதும் 5ஜி இணைப்பை கொடுப்பதாக அறிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா 5ஜி சேவை குறித்து எந்த அறிவிப்பும் தற்போது வரை வெளியிடவில்லை. விரைவில் தங்களது பயனர்களுக்கு நிறுவனம் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil