/tamil-ie/media/media_files/uploads/2018/02/1-15.jpg)
பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள், அதில் செலவிடும் நேரம் கணிசமாக குறைந்து வருவதால் ஃபேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில், ஃபேஸ்புக்கின், நியூஸ் ஃபீட் பக்கத்தில் புதிய மாற்றங்கள் வர இருப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி, இனி வரும் காலங்களில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தங்கள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட உதவும் வகையில் நியூஸ் ஃபிட் பக்கம் உதவ இருக்கிறது. பயன்படுத்துபவர்கள் இனிமேல், தங்கள் நண்பர்களின் புகைப்படங்கள் மற்றும் உறவினர்கள் ஷேர் செய்து தகவல்களை அதிகளவில் பார்க்க முடியும்.
தனியார் விளம்பரங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் அதிகப்படியான வைரல் வீடியோக்கள் மற்றும் தேவையற்ற வீடியோக்கள் தென்படுவது பெருமளவில் குறையும் என்றும் பதிவிட்டிருந்தார். இந்த மாற்றத்தால், மாணவர்கள், இளைஞர்கள் போன்றோர் அதிகம் நேரம் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரம் குறையும், சமூகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த மாற்றம் வகை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.மார்க்கின் இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றிருந்தனர்.
இந்நிலையில், ஃபேஸ்புக்கில் இந்த புதிய மாற்றம் வருவதற்குள், பயன்படுத்துபவர்கள் செலவிடும் நேரம் 5% குறைந்துள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த மாற்றத்துக்கான காரணத்தை ஆய்வு செய்யுமாறு, நிபுணர்களிடம் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும், பேஸ்புக்கை தினமும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 7 லட்சம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும், இந்த வீழ்ச்சிக்கு பின்னரும் எதிர்பார்த்ததைவிட சிறந்த முடிவுகளை பெற்றிருப்பதாக மார்க் தெரிவித்துள்ளார். மார்க்கின் இந்த முடிவுக்கும் மூத்த நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த மாற்றத்தால் பயனாளர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.