2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் டெக்னாலஜி துறையில் புதிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். கல்வி நிலையங்களில் 5ஜி ஆய்வகம் முதல் லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்க வரி விலக்கு வரை பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
வணிகர்களுக்கு பான் அட்டை
வியாபாரம் நடத்தும் அனைவருக்கும் இனி PAN (Permanent Account Number) பொது அடையாள அட்டையாக செயல்படும். இதனால் இனி வணிகர்கள் அவர்களின் வியாபாரம் சம்பந்தப்பட்ட விவரங்களை இந்த PAN எண்ணை வைத்தே சமர்ப்பிக்கலாம்.
விவசாயிகளுக்கு பொதுவான டிஜிட்டல் தளம்
இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்காக தனியாக ஒரு டிஜிட்டல் தளம் ஒன்றை அமைத்து அதில் விவசாயிகளுக்கான அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், விவசாயம் செய்யும் முறை, விவசாயிகளுக்கு அறிவுரை, காப்பீடு திட்டம், சந்தை மதிப்பு உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் உள்ளடங்கிய டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி ஆய்வகங்கள்
இந்தியாவில் 5ஜி சேவையை அதிகரிக்க பல்வேறு கல்வி நிலையங்களில் ஆய்வகங்கள் அமைக்கப்படும். 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இந்த ஆய்வகங்கள் பல்வேறு துறைகளில் 5ஜி சேவையை பயன்படுத்த திறம்பட உருவாக்கப்படும். இந்தியாவில் மொபைல் டெலிபோனி விநியோகத்தில் மையமாக இருந்த தொலைத்தொடர்பு துறைக்கும் இந்த ஆய்வகங்கள் அமைப்பது உதவும். நாட்டில் 50க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவைகளை பெறுகின்றன. விவசாயம், பள்ளி கல்வி, ஸ்மார்ட் வகுப்பறை உள்ளிட்டவற்றில் 5ஜி பயன்படுத்த இது உதவும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இளைஞர்களின் திறன் மேம்பாடு செய்ய Skill India டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லித்தியம் பேட்டரி
கேமரா லென்ஸ்கள், லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி விலக்கு மேலும் ஓர் ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் எலக்ட்ரிக் வாகன பொருட்கள் அதன் பேட்டரிகள் விலை குறைவாக கிடைக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/