பொருளாதாரத்தில் பிந்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தின்படி செல்லுமா ? எனபது குறித்து மனுக்கள் இன்று முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கபட உள்ளது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் தலைமையில் நீதிபதி ரவிந்தரா பட், தினேஷ் மகேஷ்வரி, எஸ் பி பர்திவாலா, பெல்லா த்ரிவேதி, ஆகியோர் விசாரிக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 % இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கில் 103வது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு 2019ம் ஆண்டு கொண்டுவந்தது. அதன் காரணமாக ஒட்டுமொத்த இட ஒதுக்கீடும் 50% கடந்தது.
இந்த மனுக்கள் மீது சுமூக விசாரணையை உறுதி செய்வதற்கான நடைமுறைகள் குறித்து உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை பரிசீலனை மேற்கொண்டது. அப்போது, வாதங்களை முன்வைப்பதற்கு தேவையான காலஅவகாசம் குறித்து வழக்குரைஞா்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனா். இதையடுத்து, உச்சநீதிமன்ற அமா்வு வியாழக்கிழமை (செப். 8) மீண்டும் கூடி, சுமூக மற்றும் ஆக்கப்பூா்வ விசாரணைக்கான உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்; அனைத்து தரப்பினரும் வாதங்களை முன்வைக்க கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா். இதனிடையே, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசியல்சாசன அமா்வு தெரிவித்தது.
சமூக நிலையிலும் கல்வி நிலையிலும் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவரும் நிலையில், அரசமைப்பின் 103ஆவது திருத்தமானது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீட்டை அனுமதித்துள்ளது. அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அடையாளம் காணுவதில் மாநில அரசுக்கு உள்ள அதிகாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தாக்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.