ஒரிசாவில் பள்ளியொன்றில் ஆசிரியர் ஒருவர், மாணவிகளை வைத்து தன் இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த ஆசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
ஒரிசா மாநிலம் அங்கூர் மாவட்டத்தில் உள்ள அமந்த்பூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் இச்சம்பவம் நடைபெற்றது. இச்சம்பவத்தை ஒடிஷா டிவி சமீபத்தில் ஒளிபரப்பியது.
அந்த வீடியோவிலிருந்து ஆசிரியரின் பெயர் சஞ்ஜுக்தா மஜ்ஹி என்பது தெரியவந்தது. அதில், அந்த ஆசிரியர் தன் கையில் பிரம்பு ஒன்றை வைத்துக்கொண்டு, தன் இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்யுமாறு கட்டளையிடுகிறார்.
இந்த சம்பவத்தை, அப்பள்லியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் செல்ஃபோனில் வீடியோவாக பதிவு செய்தார். இருசக்கர வாகனத்தை மாணவிகளை வைத்து சுத்தம் செய்வது குறித்து கோபம் கொண்டு அதனை அந்த ஆசிரியரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு செய்யும் சேவை”, என கூறினார்.
இதற்கு முன்பும், அந்த ஆசிரியர் மாணவர்களை இதுபோன்று சொந்த வேலைகளுக்கு பயன்படுத்தியதாகவும், ஏற்கனவே தலைமை ஆசிரியர் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தலைமை ஆசிரியர் கவனத்திற்கு சென்றபோது, அந்த மாணவிகளே விரும்பி தன் வாகனத்தை சுத்தம் செய்ததாக அந்த ஆசிரியர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பள்ளியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.