சின்னத்தடாகம் அருகே வரப்பாளையம் பகுதியில் காட்டு யானை ஊருக்குள் சுற்றி திரிந்த ஒற்றை சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் தடாகம், மாங்கரை, ஆனைகட்டி, தொண்டாமுத்தூர், மருதமலை ஆகிய பகுதிகளில் அண்மை காலங்களாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மருதமலை மற்றும் பெரியதடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவிலில் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் அடிக்கடி யானைகள் வருவதால் இரண்டு கோவிலுக்கும் வனத்துறையினர் நேர கட்டுப்பாடுகளை நேற்று விதித்தனர். மேலும் மருதமலை பகுதியில் வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களிடையே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் தடாகம் வரப்பாளையம் ஊருக்குள் இரவு சுமார் ஒரு மணி அளவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அதிகாலை சுமார் நான்கு மணி அளவில் ராமசாமி என்பவர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் கரும்புகளை உண்டு சென்றுள்ளது. இந்நிலையில் யானை ஊருக்குள் நடமாடிய சிசிடிவி காட்சிகள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
காட்டு யானைகள் ஊருக்கு வராத வண்ணம் வனத்துறையினர் நாள்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு பொதுமக்களுக்கும் விளைநிலங்களுக்கும் பாதுகாப்பு வழங்கிட அப்பகுதி மக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"