பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை 67-வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைத்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திர விவசாயிகள் அனுப்பியது என்பதோ 68-பைசா காசோலையாகும். ஆந்திராவின் ராயல்சீமா, சாதனா சமீதி, கர்னூல் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த என்.ஜி.ஓ-க்கள் 68-பைசா மதிப்பிலான காசோலைகளை, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைத்தனர்.
ஆந்திராவின் ராயல் சீமா, கர்னூல், கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகிளில் உள்ள விவசாயிகள் வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து நீர் பாசன வசதிகள் கேட்டும் மத்திய அரசு உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் பல்வேறு நதிகள் செல்வதாகவும், ஆனால் தகுந்த நீர்பாசன மற்றும் குடிநீர் திட்டம் ஏதும் இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், நீர் பற்றாக்குறை ஏற்படுவதாக புகார் தெரிவிக்கும் அவர்கள், தங்களது குறைகளை பெரிய அளவில் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு காசோலை அனுப்பியதாக குறிப்பிட்டனர். அமைதி வழியிலான இந்த போராட்டம், கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புவதாக தெரிவித்தனர். விவசாயிகளின் அவல நிலையை உணர்த்துவதற்கு தொண்டு நிறுவனங்கள் வித்தியாசமான முறையை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.